கனடாவில் அகதிகளை சிறையில் அடைக்கும் சட்டங்களில் புதிய திருத்தங்கள்
டொரண்டோ: கனடாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை சிறையில் அடைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.
கனடாவில் அரசு அகதிகளின் ஏற்பும், மறுப்பும் குறித்து C - 31 என்ற புதிய சட்டத்தை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது Canadian Medical Association Journal -ல் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில், புகலிடம் தேடி வருவோரை சிறையில் அடைப்பது அவர்களது மன வேதனையை அதிகமாக்கி மனநலத்தைக் கெடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் அகதியாக ஏற்கப்பட்ட தமது குடும்பத்தை அழைத்து வருவதற்கு ஐந்து ஆண்டுகளாவது வேண்டும் என்ற நிபந்தனையும், தனியாக வாழும் அந்த அகதியின் மனநலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் 16 வயதுக்கும் குறைவான பிள்ளைகளைத் தாய்மாரிடமிருந்து பிரித்து வைப்பதும் அவர்களுக்கு தீமை விளைவிப்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சட்டத்தில் தற்போது சில திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதலில், ஒரு ஆண்டுகாலம் வரை அகதிகளை அடைத்து வந்த நிலையை மாற்றி இனி ஆறு மாதம் மட்டுமே அடைக்கப்படுவர். அகதிகளின் மருத்துவ நலம் குறித்துப் புதிய கொள்கை அறிமுகமாகிறது. மருந்து, பல் பாதுகாப்பு, கண் பாதுகாப்பு போன்றவை கவனிக்கப்படும் என மாற்றம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications