பாஜக அட்டாக் மோடில் எடப்பாடி.. அசல் திராவிட கட்சி நாங்கள்தான்.. குதூகலத்தில் அதிமுக தொண்டர்கள்!
சென்னை; தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சாரக் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை திமுக சார்ந்த விமர்சனங்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக குறித்தோ மோடி குறித்தோ பட்டும் படாமல் பேசிக்கொண்டு வந்தார். ஆனால், நேற்று பொள்ளாச்சியில் பேசியவர், நேரடியாக பாஜகவையும் மோடியையும் தாக்கிப் பேசியுள்ளார். மோடியின் ரோடு ஷோ எந்த பயனும் அளிக்கப்போவதில்லை என்று விமர்சித்த அவர், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படக்கூடாது என்று பிரதமர் சொல்வாரா என்று வினவியுள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதும் விமர்சனம் வைத்தார்.
இதுவரை பேசாத எடப்பாடி பழனிசாமி இப்போது ஏன் பேசுகிறார் என்ற கேள்விக்கு, இதெல்லாம் முன்னாடியே திட்டமிடப்பட்டது தான் என்றும், நேரம் பார்த்து குறி வைத்து பாஜகவை அடித்துள்ளார் எடப்பாடி என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர் உற்சாகத்துடன். தாங்கள் வெகுநாள் காத்திருந்த நாள் வந்ததாகவும் இனி அதிமுகவின் அடி சரவெடியாக இருக்கும் என்றும் குதூகளிக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

மேலும், அதிமுக காணாமல் போய்விடும் என்ற தொனியில் நேற்று அண்ணாமலை அளித்த பேட்டி அதிமுக தொண்டர்களை மேலும் உசுப்பேத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத திராவிட கட்சியான அதிமுகவை அழித்துவிட்டால் தமிழ்நாட்டை கைப்பற்றிவிடுவது எளிது என்ற பாஜக போடும் கணக்கின் வெளிப்பாடே அண்ணாமலையின் நேற்றைய பேச்சு.
பெரியாரின் கோபத்துடனும் அண்ணாவின் கொள்கையுடனும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்துக்கொண்டு இருப்பது எடப்பாடி பழனிசாமி தான் என்பது அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை. அதனால் தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக முழு ஆதரவுடன் இன்று பொதுச்செயலாளராக தேர்தலை சந்திக்கிறார் எடப்பாடி.
பெரியாரின் படத்தையும் அண்ணா படத்தையும் பொறித்து பேனர் அடிப்பது அல்ல திராவிடம். அது வீரியமிக்க மக்கள் பணியும் காரியமாற்றும் கடப்பாடும் கொண்ட உணர்வு. 1972 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலை தீர்மானித்து வரும் அதிமுகவை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கட்சியை, நேற்றைய மழையில் முளைத்தவர்கள் எல்லாம் பேசுவதை பொறுத்துக்கொள்வதாக இல்லை என்றும், மீண்டும் மீண்டும் அதிமுகவை குறிவைக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் உரிய பதிலடியை கொடுக்கும் முனைப்பிலும் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications