களத்தில் எதிரொலிக்கும் சங்கங்களின் ஆதரவு- அதிமுகவிற்கு கொத்தாக குவியும் வாக்குகள்!
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் இடம்பெறவில்லை. இருப்பினும் கூட களத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பல சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு கொத்தாக வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அனைத்து கட்சிகளும் தங்களின் பலத்தை அதிகரிக்கவும், பெருவாரியான வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கவும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.
பாஜக கூட்டணியில் இருந்து முற்றிலுமாக வெளிவந்த அதிமுக இந்த தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் கூட்டணியை பலப்படுத்தும் பணியை அதிமுக பொறுமையாகவே தொடங்கியது. தற்போது அதிமுக கூட்டணியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
பாஜக, திமுக உள்ளிட்டவை தமிழகத்தில் உள்ள பிற பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வந்த நிலையில் எடப்பாடி தங்கள் கட்சியின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதும், சிறிய சங்கங்களின் ஆதரவை பெறுவதில் தன் முனைப்பை காட்டினார். இந்த நகர்வில் களத்தை நன்கு புரிந்த கள அரசியல்வாதி என பழனிசாமியை கூறலாம். ஏன் என்றால் இந்த சிறிய சங்கங்களின் தாக்கம் சமூகத்தில் அதிகமாகவே இருக்கும். மேலும் அந்த தாக்கம் தேர்தலில் பிரதிபலிக்கும்.
4000 பேர் கொண்ட ஆடு மேய்ப்பவர்கள் சங்கத்தினர் தங்களின் ஆதரவை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதுப்போக அகில இந்திய மீனவர் சங்கமும், விருதுநகரில் பட்டாசு உற்பத்தி சங்கத்தினரும், இஸ்லாமிய அமைப்புகளும் தங்களின் ஆதரவை எடப்பாடிக்கு அளித்துள்ளனர்.
அதேபோல் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் என்பதால் விவசாயிகள் சங்கத்தினரும் தங்கள் ஆதரவை எடப்பாடிக்கு தந்துள்ளனர். இதுப்போல் பல சங்கங்கள், மற்றும் அமைப்புகளின் ஆதரவையும் தன் பக்கம் இழுத்து உள்ளார் எடப்பாடி பழனிசாமி. சில கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தும், பல கட்சிகள் இணையத்தில் அரசியல் செய்யும் வேலையில் இருக்கும் பொழுது எடப்பாடி அதிமுகவை சங்கங்களின் மூலமாக வலுபடுத்திய இந்த நகர்வு தேர்தல் முடிவுகளில் அதிமுகவுக்கு நல்ல பலன் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications