இன்றுடன் 27 வருடம்.. ஆர்ஜேடி கட்சியை லாலு பிரசாத் ஏன் தொடங்கினார்? இவ்ளோ விஷயம் இருக்குது பாருங்க
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம்.. இந்திய அரசியலில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திய லாலு பிரசாத் யாதவ் 27 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கட்சி.. இன்னமும் சவால்களை எதிர்கொண்டு வலிமை இழக்காத பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது லாலுவின் ஆர்ஜேடி எனும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி.
லாலு பிரசாத் யாதவ்.. 1970களில் மாணவர் சங்க அரசியலில் நுழைந்து 1974-ல் முதுபெரும் தலைவர், அன்றைய அரசியல் புரட்சியாளர் ஜெயபிரகாஷ் நாராயணின் பீகார் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராக உயர்ந்தவர். எமர்ஜென்சி கொடுமைகளுக்குப் பின் 1977 லோக்சபா தேர்தலில் ஜனதா கட்சி எம்.பி.யானார். அப்போது லாலு பிரசாத் யாதவுக்கு வயது 29. ஜனதா கட்சி பின்னாளில் பிளவு பட்ட சூழ்நிலையில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் பீகார் முகமாக தீவிரமாக செயல்பட்டவர்.

பீகார் மாநிலத்தில் யாதவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், தலித்துகள், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் லாலு பிரசாத் யாதவ். 1990-ல் பீகாரில் ஜனதா தளம் ஆட்சியைக் கைப்பற்றிய போது மாநில முதல்வரானார். 1990-1995; 1995-1997ல் பீகார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்தார். பீகார் முதல்வராக 7 ஆண்டுகள் லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகள், ஊழல் வழக்குகளை எதிர்கொண்டிருந்தார்.
அரசியல் பிளயம்: 1990-ம் ஆண்டு ஜனதா தளம் அரசின் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்த போது, ரதயாத்திரை நடத்திய பாஜக மூத்த தலைவர் அத்வானியை கைது செய்து இந்திய அரசியலில் பெரும் பிரளயத்துக்கு காரணமாக இருந்தார். லாலுவின் அத்வானி கைது நடவடிக்கையால்தான் அப்போதைய பிரதமர் விபி சிங் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது. அதன் பிந்தைய கால கட்டத்தில் தேசிய அளவில் ஜனதா தளம் தமது செல்வாக்கை இழந்தது. ஜனதா தளம் என்ற கட்சியே காணாமல் போய் மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் என புதிய கட்சிகள் உருவெடுத்தன.

ராஷ்டிரிய ஜனதா தளம்: 1997-ம் ஆண்டு இதே ஜூலை 5-ந் தேதிதான் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உருவானது. ஜனதா தளம் கட்சியின் 17 லோக்சபா எம்.பிக்கள், 8 ராஜ்யசபா எம்.பிக்கள் ஆதரவு தெரிவிக்க லாலு பிரசாத் யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் உதயமானது. லாலு பிரசாத் யாதவுடன் ரகுவன்ஸ் பிரசாத், காந்தி சிங் என மூத்த தலைவர்கள் கைகோர்த்தனர்.
தேர்தல் அரசியலில்..: பீகார் மாநிலத்தை தளமாக கொண்ட கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் செயல்பட்டாலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. கட்சி தொடங்கிய முதல் ஆண்டிலேயே 1998 லோக்சபா தேர்தலில் 17 எம்.பி இடங்களை கைப்பற்றி அசர வைத்தது ராஷ்டிரிய ஜனதா தளம். இதனைத் தொடர்ந்து பிற வட இந்திய மாநிலங்களிலும் கால்பதிக்க கூட்டணி அமைத்தது இந்த கட்சி. ஆனால் இந்த முயற்சி பெரிய அளவில் கை கொடுக்காமல் போனது.

பீகார் ஆட்சியில்.. : பீகார் மாநிலத்தில் 1997-1999; 1999-2000; 2000-2005 என ஆட்சியில் இருந்தது ராஷ்டிரிய ஜனதா தளம். அதன் பின்னர் நிதிஷ்குமாரின் பேரெழுச்சி, பாஜகவின் வளர்ச்சி ஆகியவற்றால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியாக பிறப்பெடுத்த பின்னர் 1999 லோக்சபா தேர்தலில் 7; 2004-ல் 24; 2009-ல் 4; 2014-ல் 4 இடங்களில் வென்றது. ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாமல் போனது அரசியல் துயரம். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் 2000-ல் 124; 2005-ல் 75; 2005-ல் 54; 2010-ல் 22; 2015-ல் 80; 2020-ல் 75 இடங்களைப் பெற்று பலத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது ராஷ்டிரிய ஜனதா தளம். இப்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து பீகாரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், பீகார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.

பொற்காலம்: ராஷ்டிரிய ஜனதா தளம்- லாலு பிரசாத் யாதவ் என்றாலே ஒருவித அசூயை வட இந்திய மேல்தட்டு அரசியல் வர்க்கத்திடம் இன்னமும் இருக்கிறது. இதனால் இந்திய அளவில் அதிக அளவிலான கேலிகளுக்கும் கிண்டலுக்குமான கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளமும் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவும் உருவகப்படுத்தப்பட்டார். ஆனால் மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பணியாற்றிய காலம் இப்போதும் ரயில்வே துறையின் பொற்காலமாக- பொதுமக்களால் போற்றப்படுகிற ஒரு காலமாக இருப்பது லாலு பிரசாத் யாதவின் செயல்பாடுகளுக்கு ஒரு மணி மகுடமாகவும் இருக்கிறது.
ஊழல் வழக்குகள்: இன்னொரு பக்கம், இந்தியாவையே இன்னமும் அதிரவைத்துக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள், ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு போன்றவை லாலு பிரசாத் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பயணத்தில் மிக மோசமான கறுப்பு பக்கங்கள் என்பது யதார்த்தமானவை.

செல்வாக்கின் அடிப்படை: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் ஆகியோரது வாக்கு வங்கியை வலிமையாக கொண்டிருக்கிறது ராஷ்டிரிய ஜனதா தளம். ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கி விபி சிங் வரையிலான ஜனநாயக, சமூகநீதி கோட்பாடுகளின் பிதாமகன்களைப் பின்பற்றிய அரசியலை இன்னமும் முன்னெடுப்பவர் லாலு பிரசாத் யாதவ். அவரது அடிச்சுவட்டில் அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சமூக நீதி பேசும் கட்சிகளில் ஒன்றாக தொடர்ந்து பயணிக்க வைப்பார் என்பதை அண்மைய அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சமூக நீதி பயணம்: அண்மையில் தமிழ்நாட்டின் திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்தார் தேஜஸ்வி. தமிழ்நாட்டில் திமுகவுடன் இணக்கமான உறவை கொண்டிருகிறார் தேஜஸ்வி. நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வலது கரமாக செயல்படுகிறார் தேஜஸ்வி யாதவ்.
லாலு பிரசாத் எனும் பீகார் மண்ணின் சமூக நீதியாளர் உருவாக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 27-வது நிறுவன நாளை கொண்டாடும் இந்த தருணம் அக்கட்சி வலுவான பல சவால்களை, காட்டாறுகளை கடந்து வேரூன்றி நின்றாக வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications