டிசம்பர் 3ல் கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணி முதல் 7.15 மணிக்குள் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவண்ணாமலையில் உலக புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் 14 கி.மீ. தூரம் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு.
சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு நடக்கும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகைத் தீபத் திருவிழா நாளை (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக கோயில் வளாகம், ராஜகோபுரம், 16 கால் மண்டபம் பகுதிகளில் வெடிபொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனிடையே 7ஆம் நாள் விழாவான 30ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான டிசம்பர் 3ஆம் தேதி மாலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.












Click it and Unblock the Notifications