மதுரையில் ஆட்சி மாற்றம்.. அரசியானார் அன்னை மீனாட்சி! வீதியுலா வந்து அருளாசி தந்த பாண்டியராசகுமாரி!
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவில் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வைகை பாய்ந்தோடும் மதுரையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மதுரையின் அரசியாக மகுடம் சூட்டினார் அன்னை மீனாட்சி. பட்டாபிஷேகத்திற்கு பிறகு வீதி உலா வந்த அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று மனமுருக வணங்கினர்.
உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நான்கு மாச வீதிகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

அந்த வகையில் எட்டாம் நாள் திருவிழாவான நேற்று மதுரையின் அரசியாக அன்னை மீனாட்சி மணிமகுடம் சூடும் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்பு மதுரையின் இளவரசியாக அன்னை மீனாட்சி முடி சூடிக் கொள்ள மாபெரும் பட்டாபிஷேகம் நிகழ்வு நடைபெறுவது என்பது வழக்கம்.
அதற்காக சித்திரைத் திருவிழாவின் எட்டாவது நாளில் காலையிலேயே மீனாட்சிக்கு விசேஷமான பூஜைகள் செய்து, பிறகு கோவிலில் இருக்கக்கூடிய பந்தலில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி, ராயர் கிரீடம்' எனப்படும் வைரக் கிரீடம் மற்றும் செங்கோலும் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்பட்டது. வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும்.
பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு மாபெரும் பட்டாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல பரிவாரங்களுடன் சுவாமி சந்நிதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாசிவீதிகளிலே வலம் வந்து சாலைகளின் இரண்டு புறங்களிலும் காத்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்த அன்னை மீனாட்சியை பக்தர்கள் கண்டு பரவசமடைந்து அம்மனின் அருளை பெற்றனர். கோவில் யானை பார்வதி முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க மீனாட்சி கருப்பணசுவாமி முருகன் உள்ளிட்ட வேடங்கள் தரித்த குழந்தைகள் முன்னே செல்ல பட்டாபிஷேக நிகழ்விற்கு பிறகு மாலை 9 மணிக்கு மேல் அம்மன் சன்னதி வாயிலாக புறப்பட்ட அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.














Click it and Unblock the Notifications