திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 17: கர்வம் கொள்ளாதீர்! அகந்தை அடங்கினால் இறைவனை அடையலாம்!
சென்னை: மார்கழி மாதம் 17-ஆம் நாள் இன்று! மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை வாமனன் அடக்கிய கதை தெரியுமல்லவா? அது போல் எந்த சூழலிலும் கர்வம் கொள்ள கூடாது என ஆண்டாள் பாடுகிறாள். அவ்வாறு தான் என்ற அகந்தையை ஒழித்தால் இறைவனை அடைவது உறுதி!

திருப்பாவை பாடல் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: மக்களின் திருப்திக்காக ஆடைகள், குளிர்ந்த நீர் மற்றும் உணவை வழங்கும் தலைவரான நந்தகோபாலன் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடிபோன்ற இடையையும், இளகிய மனதையும் கொண்ட பெண்களுக்குத் தலைவியான யசோதை, மங்களகரமான தீபம் போன்று பிரகாசிக்கும் முகத்துடன் எழுமாறு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
வானைக் கிழித்து, தனது திருவடிகளால் உலகை அளந்த தேவர்களின் தலைவரான கண்ணன் கண்விழிக்க வேண்டும். செம்பொன்னால் ஆன சிலம்புகள் அணிந்த செல்வத் திருமகனான பலராமன், தன் தம்பியுடனே தூக்கத்திலிருந்து எழுந்து பக்தர்களுக்கு தரிசனம் தர வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும்.
திருவெம்பாவை 17
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: நாராயணன், பிரம்மா உள்ளிட்ட வேறு எந்தத் தெய்வமும் வழங்காத இணையற்ற இன்பத்தை அருளும் சிவபெருமான், பக்தர்களின் இல்லங்களைத் தேடி வருகிறார். அவர், அடியார்களைத் தனது தாமரை போன்ற திருவடிகளால் ஆட்கொள்ளும் நோக்குடன், சேவகன் போன்று பணிவுடன் இறங்கி வருகிறார்.
அனைவருக்கும் அமுதமாகத் திகழும் அழகிய கண்ணனான சிவபெருமானை வணங்கி நற்பலன் பெற, பக்தர்கள் தாமரை மலர்கள் மிதக்கும் பொய்கையில் நீராடி, அவரது தரிசனத்திற்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications