நாளை மீனாட்சி திருக்கல்யாணம்! திருமாங்கல்ய சரடு மாற்ற நல்ல நேரம் எது? செவ்வாய்க்கிழமையில் மாற்றலாமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகுதியாக ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்ரல் 28) நிகழும் நிலையில் அந்நாளில் புதிய தாலிச்சரடு மாற்றிக் கொள்ள உகந்த நேரத்தையும், வீட்டிலிருந்தே அம்மன் அருளைப் பெறும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

மதுரை என்றாலே பலருக்கும் தனித்துவச் சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் கோவில் தான் நினைவில் வரும். 12 நாட்கள் நடைபெறும் இச்சித்திரை திருவிழாவின் மாபெரும் நிகழ்வுகளில் அன்னை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் முதன்மை பெற்றது.

Meenakshi Thirukalyanam 2026

ஏப்ரல் 26-ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்று, அடுத்த நான்கு மாதங்களுக்கு அவரே மதுரையின் அரசியாக ஆள்வதாக ஐதீகம். அதன் பிறகு சிவபெருமான் ஆட்சி செய்வார். சிவனும் சக்தியும் மாறி மாறி ஆட்சி செய்யும் அற்புதம் வேறு எங்கும் காண முடியாது.

பட்டாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்று மீனாட்சி திக்கு விஜயமும், ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நிகழும். திருமணத்தை நடத்த அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வர தாமதமானதால், திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்ரமணிய சுவாமியும் பவளக்கனிவாய் பெருமாளும் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.

பொதுவாக தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்தாலும், மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணமும் அன்றுதான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், மீனாட்சிக்கு மட்டும் சித்திரை மாதத்தில் திருக்கல்யாணம் நடைபெற ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாண்டிய மன்னர் மரபுப்படி, சித்திரை 'வசந்த காலத்தின்' தொடக்கம் என்பதால், பக்தர்களின் வாழ்வு செழிக்கவே அன்னையின் திருமணம் சித்திரையில் நடத்தப்படுகிறது.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன், இக்கோவில் விழாக்கள் பங்குனியிலும், அழகர்மலை உற்சவங்கள் சித்திரையிலும் தனித்தனியே நடைபெற்றன. சைவ-வைணவ ஒற்றுமையை ஏற்படுத்தவே நாயக்க மன்னர் இவ்விழாக்களை ஒன்றிணைத்து, சித்திரை மாதத்தில் நடத்தினார்.

திருக்கல்யாணத்தின்போது அன்னை மீனாட்சிக்கு அணிவிக்கப்படும் பச்சை நிற பட்டுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. மதுரை ஒரு காலத்தில் கடம்ப வனமாக இருந்ததால், அந்த வனத்தின் அரசியாக அவள் இருப்பதை பச்சை நிறம் குறிக்கிறது.

மேலும், அழகர் (விஷ்ணு) பச்சை நிறம் கொண்டவர் என்பதால், அண்ணன்-தங்கை உறவின் பிணைப்புக்கான குறியீடாகவும் இது பார்க்கப்படுகிறது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது, மதுரையின் திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யக் கயிற்றைப் புதிதாக மாற்றிக் கொள்வார்கள். அன்னைக்குத் தாலி கட்டப்படும் அதே நேரத்தில், ஊரே தாலி மாற்றும் நிகழ்வு 'மாங்கல்ய பலம்' தரும் என்பது ஐதீகம்.

திருமணத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதப் பைகளில் மஞ்சள், குங்குமம், சிறிய கயிறு இருக்கும். இது அன்னை மீனாட்சி தன் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்குத் தரும் 'சீதனமாகக்' கருதப்படுகிறது. மதுரை மக்கள் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே கருதுவதால், இந்நாளில் நகரம் முழுவதும் பக்தர்களுக்குத் திருமண விருந்துகள் (அன்னதானம்) வழங்கப்படும் வழக்கம் உள்ளது. இதற்காக உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 28ஆம் தேதி, செவ்வாய்கிழமை அன்று காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் நடைபெறும். இந்நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் இயலாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் மாற்றலாம்.

செவ்வாய்கிழமை குறித்த தயக்கம் இல்லாமல் பெண்கள் தாராளமாக பங்கேற்கலாம். திருமணத்தில் நேரடிக் கலந்துகொள்ள முடியாதவர்கள் வீட்டிலிருந்தே அம்மன் அருளைப் பெற, மீனாட்சி அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி, விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் படைத்து வழிபடலாம். அன்னை மீனாட்சியின் 108 போற்றி மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்குத் தானம் வழங்கவும், இருவருக்காவது அன்னதானம் அளிப்பதன் மூலமும் அம்மனின் அருளைப் பெற முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+