Thaipoosam: இன்று தைப்பூசம் திருவிழா.. முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதத்தின் முக்கிய நிகழ்வு தைப்பூசம். தமிழ்க் கடவுள் முருகனை கொண்டாடும் நிக்ழவாகவே தைப்பூசம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் தை மாதத்தின் பூசம் நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகனுக்கு இந்த தைப்பூசம் நிகழ்வு முக்கியமானதாகும். தை மாத அறுவடைக்கு பிறகு, விவசாயிகள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை முருகனுக்கு படைப்பார்கள். இந்த நிகழ்வு அனைத்து முருகன் மற்றும் சிவன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.

தைப்பூசம் பூஜை
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமி மலை, திருத்தணி, பழுமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் தைப்பூசம் விசேஷமாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகள் உள்ளிட்ட முக்கிய முருகன் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் பாதை யாத்திரையாக சென்று முருகனை வழிபடுவார்கள்.
இந்த வருடமும் அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகிறார்கள். முக்கியமாக திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மிகவும் பிரம்மாண்டமாக தைப்பூசம் கொண்டாடப்படும். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் கொடியேற்றத்துடன் தொடங்கி தேர் திருவிழா வரை விமரிசையாக நடைபெறும்.
பக்தர்கள் கூட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலே முதலே முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன. சிறப்பான அலங்காரத்துடன் முருகன் அருள் பாலிக்கிறார். அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அலைமோதுகிறார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதேபோல கோவையில் உள்ள மருதமலை கோயிலும் பக்தர்கள் அதிகளவு குவிந்துள்ளனர்.
சென்னையில் உள்ள வடபழனி கோயிலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். விடிய விடிய நீண்ட தூரம் பாத யாத்திரை சென்று மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்தி கடனும் செலுத்தி வருகிறார்கள். பக்தர்களுக்கு அரசு மற்றும் பக்தர்கள் சார்பில் உணவு, தண்ணீர், பழச்சாறு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications