சபரிமலை மண்டல பூஜையில் வரலாற்று சிறப்பு! நேற்று ஒரே நாளில் ஐயப்பனை 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
பத்தினம்திட்டா: சபரிமலையில் ஐயப்பனை நேற்று ஒரே நாளில் 1.06 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ள சம்பவம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதுவரை ஒரே நாளில் இத்தனை பேர் தரிசனம் செய்ததே இல்லையாம்.
கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் மண்டல பூஜைக்கும் மகர விளக்கு பூஜைக்கும் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சபரிமலையில் நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜை யாத்திரை தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

41 நாட்கள் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜைக்கான நாள் இன்னும் 2 நாட்களில் நெருங்கி வரும் நிலையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மண்டல பூஜை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 23) 1,06,621 பேர் சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 22,769 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும் 5,175 பேர் புல்மேடு வழியாகவும் வந்து தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி முதல் கடந்த 38 நாட்களில் 30.78 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பூஜை காலத்தில் 26.41 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்தனர். எருமேலியிலிருந்து அழுதா நதி வழியாக பம்பை வரும் பெருவழிப்பாதை என்பது காலம் காலமாக பக்தர்கள் பயன்படுத்தி வந்த பாதையாகும்.
இது அடர்ந்த காடாகும். இங்கு ஒற்றையடி பாதையாகும். எருமேலி வனச்சாலை செல்ல அழுதா நதியில் இருந்து 30 கி.மீ. தூரம் ஆகும். இங்கு பயணிக்கும் பக்தர்கள் நடுகாட்டுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் செல்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்குழியில் இருந்து பக்தர்களை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் அழுதாவிலிருந்து காலை 7 மணி முதல் மாலை 3.30 மணி வரையும், புல்மேடு பாதையில் சத்திரத்திலிருந்து காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகா சங்கராந்தி நாளன்று மகர ஜோதியை காண ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கடந்த சில தினங்களாக சுவாமி தரிசனம் செய்ய அதிகபட்சமாக 18 மணி நேரம் ஆகிறது. https://sabarimala.kerala.gov.in/ என்ற ஐடியில் பக்தர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இதில் போன் எண்ணை கொடுத்து அவர்களுக்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து தனிக் கணக்கு தொடங்கிவிட வேண்டும்.
பிறகு பெயர், முகவரி, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்களை பதிவிட வேண்டும். பிறகு தரிசன நாள், செல்லும் பாதை, சபரிமலை கோயிலை அடைந்து தரிசனம் செய்வதற்கான நேரம் உள்ளிட்டவை தேர்வு செய்து உறுதி செய்தால் விர்சுவல் க்யூ டிக்கெட் முன் பதிவு ஆகிவிடும். பிறகு இந்த டிக்கெட்டை தரிசன கவுன்ட்டரில் கொடுத்தால் அவர்கள் ஸ்கேன் செய்து சரி பார்த்து பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications