இன்று ஆடிக் கிருத்திகை விழா! திருத்தணியில் காவடி எடுத்து பக்தர்கள் பரவசம்
திருத்தணி: ஆடிக் கிருத்திகை விழா திருத்தணி முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த முறை இரு தடவை ஆடி மாதத்தில் கிருத்திகைகள் வந்துள்ளன. இன்றும் நேற்றும் பலர் காவடி எடுத்துச் சென்று முருகனை வழிபட்டனர்.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் பக்தர்கள் முருகன் கோயில்களுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகளை செய்வதுண்டு.

ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். குழந்தைப் பேறு கிடைக்கும். மேலும் எல்லா நலன்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை, முருக பக்தர்கள் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு ஆடி மாதம் இரு கிருத்திகை நட்சத்திரங்கள் வந்துள்ளன. ஜூலை 20, ஆகஸ்ட் 16 ஆம் தேதிகளில் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் கிருத்திகை விரதம் இதுவாகும்.
ஆடி கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளால் கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு பிறப்பு- இறப்பு சக்கர சுழற்சியில் இருந்தும் விடுபட்டு மோட்சத்தை அடைய முடியும். திருத்தணி, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் ஆகஸ்ட் 16 ஆம் தேதிதான் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் ஜூலை 20 ஆம் தேதி ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications