Aadi Pooram 2025: ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பூஜை செய்ய, வளையல் மாலை அணிவிக்க உகந்த நேரம் எது?
சென்னை: ஆடி மாதம் 12 ஆம் தேதியான இன்று ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்பிகைக்கு வளையல் வாங்கி கொடுத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அது போல் வளையல் அணிவிக்க எந்த நேரம் உகந்தது என்பதையும் பார்க்கலாம்.
ஆடிப்பூரம் திங்கள்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் நேற்று (ஜூலை 27ஆம் தேதி) மாலை 6.55 மணிக்கு தொடங்கி, இன்று (ஜூலை 28ஆம் தேதி) இரவு 8 மணி வரை இருக்கிறது.

இன்றைய தினம் சதுர்த்தி திதியும் வருவதால் விநாயகர், ஆண்டாள், அம்பாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடிப்பூரத்தின் போதுதான் என்பது கூடுதல் சிறப்பு!
ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள். ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை நாம் அணிந்தால், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அது போல் திருமணத் தடை இருப்போருக்கு நீங்கி திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரத்தன்று அம்மன் கோயில்களில் கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுத்தால் அம்பிகை நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வளங்களையும் நிச்சயம் தருவாள்.
27 நட்சத்திரங்களில் 11 ஆவது நட்சத்திரமாக வருவது பூரம் நட்சத்திரம். இது சிம்ம ராசிக்குரிய நட்சத்திரம். கிரகங்களில் செல்வ செழிப்பு, சுக போக வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். அவரை அதிபதியாக கொண்ட நட்சத்திரம்தான் பூரம்.
ஆடி பூரத்தன்று அம்பிகையை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். இன்று நாக சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. எனவே இந்த ஆடிப்பூரத்தன்று நாகதேவதைகளையும் வணங்குவது நல்லது. ஆடிப்பூரத்தன்று வழிபாடு நடத்த உகந்த நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரை, 9.10 முதல் 10.20 மணி வரையும் ஆகும்.
இந்த ஆடிப்பூரத்தன்று வளையல்களை மாலையாக கோர்த்து அம்மனுக்கு அணிவிக்கலாம். அப்போது குழந்தை பேறு வேண்டுவோர், அம்மனிடம் மனமுருகி வழிபட வேண்டும். விரைவில் வளைகாப்பு வளையல் அணிந்து கொள்ளும் பாக்கியத்தை தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். இது போல் திருமணத்திற்கு வேண்டிக் கொள்வோர், நலங்கு வைத்து வழிபட வேண்டும்.












Click it and Unblock the Notifications