ஐப்பசி அன்னாபிஷேகம்.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 28ல் பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருவண்ணாமலை: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 28ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பிற்பகல்3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள்.
அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பவுர்ணமி தினமான இன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
'அன்னம் பரபிரம்மம்' என்பர். இதற்கு 'சோறே தெய்வம்' என்று பொருள். நாம் உண்ணும் உணவை தெய்வம் போல கருதவேண்டும் என்பதற்காகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள்.
சிவபிரானே உலகிலுள்ள ஸகல ஜீவ ராசிகளுக்கும் படியளப்பவர் அதனால் அந்த ஈசனுக்கு அன்னத்தை அபிஷேகம் செய்வோருக்கும் அதனை தரிசிப்போருக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு வரும் சனிக்கிழமை 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடைபெற்ற பின்னர் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications