சித்திரை சோமவார பிரதோஷம்..அமாவாசை..சதுரகிரியில் குவியும் பக்தர்கள்.. குட்நியூஸ் சொன்ன வனத்துறை
விருதுநகர்: சித்திரை மாத சோமவார தேய்பிறை பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் சூரியன் முக்கியமான கிரகமாகப் போற்றப்படுகிறார். சூரியன் ஆத்மகாரகன் மற்றும் பித்ருகாரகன்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் ஆட்சிபலம் பெற்றிருந்தால் அந்த நபர் நல்ல ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிருப்பார் என்பது ஜோதிட நம்பிக்கை. சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாளே அமாவாசை. நாளை சந்திரனும் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
சூரியனும் சந்திரனும் சந்திக்கும் இந்த நாளில் குறிப்பாக, சூரியன் மேஷ ராசியில் உச்சமடைந்திருக்கும்போது செய்யப்படும் பித்ருவழிபாடுகள் பூர்வ புண்ணியத்தை அதிகப்படுத்தும் என்கிறார்கள். சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்றும் அமாவாசை நாளில் வழிபாடு செய்வார்கள். முன்னோர்கள் வழிபாடும் முக்கியமானது. சித்தர்கள் வாழும் பூமியான சதுரகிரிக்கு சென்று மலையேறி வழிபட்டால் சகல வளங்களும் கிடைக்கும் நம்பிக்கை.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இன்று தேய்பிறை சோமவார பிரதோஷம் மற்றும் சித்திரை அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் 20ஆம் தேதி வியாழக்கிழமை வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களும் மலையேற அனுமதி கிடையாது.

மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications