ஆடி கிருத்திகை... பழனி முருகன் கோயிலில் அர்ச்சனைக்கு போனில் பதியலாமா? கோயில் நிர்வாகம் விளக்கம்
பழனி : ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருத்திகை என்றாலே முருகனுக்கு உகந்த நாள் என்று நம்பப்படுகிறது. மக்கள் பலரும் கிருத்திகை நாட்களில் முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசமான நாள் ஆகும். அப்போது முருகன் கோயிலில் கூட்டம் மிகமிக அதிகமாக இருக்கும். மக்கள் பலரும் முருகனை தரிப்பது வழக்கம்.

இந்நிலையில் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என்று ஒரு தகவல் பரவியது. இதனை பலரும் உண்மை என்று நம்பி வாட்ஸ் அப்பில் பரப்பி வருகிறார்கள். இந்த பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பழனி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "04442890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர் நட்சத்திரம் கேட்பார்.
அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் " என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.
அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை, சபைர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் ஏதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள்/பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு பழனி திருக்கோயில் நிர்வாகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications