எறும்புக்கு வளைந்து வழிவிட்ட சிவபெருமான்! திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலின் ஆச்சரியம்
சென்னை: எறும்புக்கு வழிவிட்ட சிவபெருமான் உள்ள கோயில் பற்றி தெரியுமா? திருச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதன் பின்னணியில் சொல்லப்படும் புராண காரணங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தாருகாசூரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்திருக்கிறான்.. நாளுக்கு நாள் அவனது அட்டகாசத்தை தேவர்களாலும் இந்திரனாலும் பொறுத்து கொள்ள முடியவில்லை.. அந்த அரக்கனை எதிர்த்து போரிடவும் முடியவில்லை.

எறும்பீஸ்வரர் கோயில்
இறுதியில் தாருகன் அவர்களை தோற்கடித்து தேவலோகத்தையே கைப்பற்றி விட்டான்.. இதனால் பயந்துபோன தேவர்கள், பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்திலுள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்கு சென்று இறைவனைப் பூஜிக்கும்படி கட்டளையிட்டார்.
இதே உருவத்துடன் சென்றால் தாருகன் ஏதாவது செய்துவிடக்கூடும் என்று அச்சமுற்று, எறும்பு உருவம் கொண்டு, திருவெறும்பூருக்கு சென்று, இறைவனை கண்டு தங்கள் குறைகளை சொன்னார்கள்.. உடனே சிவபெருமான், உமா தேவியுடன் காட்சி தந்து, தேவர்களை அங்கேயே சில காலம் தங்கியிருக்கும்படி கூறினார்.. தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களுடன் வந்திருந்து, தினசரி ஆயிரம் கரு நெய்தல் மலர்களால் இறைவனை பூசித்து வந்தான்.
தேவர்கள் - சிவலிங்கம்
தேவர்களும் இந்திரனும் எறும்பு வடிவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். அப்போது சிவபெருமான் லேசாக தலை சாய்த்து சரிந்து வழி கொடுத்தாராம்.. அதாவது சிவபெருமான் தன்னை புற்று வடிவில் மாற்றிக்கொண்டாராம்.. இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
தலை வணங்கி போற்றும் அடியாருக்கு சிவபெருமானே தலை வணங்கி அருள் செய்கிறான் என்பதை உணர்த்தவே, திருவெறும்பூரில் பெருமான் இன்றும் திருமுடி சாய்த்த, தலைவணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார் என்று புராணம் கூறுகிறது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட சிறப்புவாய்ந்த தலம் இதுவாகும்.. இந்த கோயிலில், இந்திரனே நேரடியாக வந்து வழிபட்டதாக திருநாவுக்கரசர் தனது பாடலில் பாடியுள்ளார்.
திருவெறும்பூர் கோயில் ஸ்பெஷல்
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருவெறும்பூரில் உள்ளது எறும்பீஸ்வரர் ஆலயம்.. 125 படிக்கட்டுகளுடன் கிட்டத்தட்ட 250 அடி உயரமுள்ள குன்றின் மீது இந்த கோவில் அமைந்துள்ளது. நடுநடுவே இளைப்பாற மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குன்றின் கிழக்கு நுழைவு வாசலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலப்புறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.. நறுங்குழல் நாயகி என்று அழைக்கப்படும் அம்மனுக்கு, இங்கு தனி சன்னதி உள்ளது.. வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. கோயிலின் மதில் சுவரில் நந்திகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குள் முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன..
பிரம்ம தீர்த்தம் சிறப்பு
கற்களாலான கருவறை கொண்ட இந்த கோயிலில் எறும்புகள் ஊறுவதற்கு வடபுறம் சாய்ந்தபடி சிவபெருமான் அமைந்துள்ளார்.. லிங்கத்தின் மீது ஊர்ந்த எறும்புகளின் அடையாளமும் இன்றுவரை பளிச்சென பார்க்க முடிகிறதாம்.. 21 தலைமுறையில் செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும்.
இந்த திருவெறும்பூர் கோயிலில் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
சுறுசுறுப்பு கிடைக்கும்
மூலவர் மண்புற்றாய் இருப்பதால், தண்ணீர் படாமல் புற்றுலிங்கம் மீது பாணம் சாத்தப்பட்டு, பாணத்தின் மீது அபிஷேகம் நடைபெறுவது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். வருடந்தோறும் வைகாசி மாதத்தில் விசாகப் பெருந்திருவிழா 10 நாட்கள் சிறபநடைபெறும். புனர்பூச நாளில் விழா தொடங்கி தெப்ப உற்சவம் என சிறப்புடன் நிறைவு பெறும்..
எந்நேரமும் சுறுசுறுப்பின்றி மந்தமாகவும், சோம்பலுடனும் காணப்படுபவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வேண்டிக் கொள்ளலாம்.. இதனால் எறும்பு போலவே உடலில் சுறுசுறுப்பு அதிகமாகும் என்பது நம்பிக்கையாகும்..












Click it and Unblock the Notifications