சந்திராஷ்டமத்தில் இதை மட்டும் செய்துடாதீங்க.. சந்திராஷ்டம் நாளில் கடைப்பிடிக்க வேண்டியது என்னென்ன?
சென்னை: சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? இந்த நாளில் செய்யக் கூடிய காரியங்கள் என்னென்ன? செய்யக்கூடாதவை என்னென்ன தெரியும்? சந்திராஷ்டம தினத்தில் கோயிலுக்கு செல்லலாமா? சந்திராஷ்டம் என்றாலே பலரும் பயப்பட என்ன காரணம்? தெரியுமா? சந்திரனை மனோகாரகன் என்று அழைக்க என்ன காரணம் தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்... அதனால் ஒவ்வொருவருக்கும், மாதத்தில் இரண்டே கால் நாட்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும். இந்த காலத்தையே சந்திராஷ்டம காலம் என்கிறோம்.

மனதில் சஞ்சலம், குழப்பம்
சந்திரன் + அஷ்டமம் என்பதே சந்திராஷ்டமம்.. இதில் அஷ்டமம் என்றால் 8 என்று பொருள். உடலுக்கும் மனதிற்கும் காரணமான சந்திரன், ஜென்ம ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கும்போது சந்திராஷ்டமம் ஏற்படுகின்றது... அதேபோல, நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலத்தையும் சந்திராஷ்டமம் என்கிறோம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுடைய ராசிக்கு 8ம் இடத்தில் சந்திரன் அமைந்திருந்தால் அன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டம் காலமாக கருதப்படுகிறது.
சந்திராஷ்டமத்தில் கோயிலுக்கு போகலாமா
சந்திரன்தான், நம்முடைய மனதையும், எண்ணங்களையும் வழி நடத்தக்கூடியது.. அந்த சந்திரன் மறைவு ஸ்தானமான 8ம் இடத்தில் மறைந்தால், நம்முடைய உடலும் மனமும் சந்திரன் அஷ்டமத்தில் பயணிக்கும்.. இப்படி பயணித்தால், அவருடைய பார்வை நம்முடைய ஜென்ம ராசியின் 2ம் இடமான குடும்பம், வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பலவிதமான கஷ்டங்கள், சிக்கல்கள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவேதான், சந்திராஷ்டம் என்றாலே பலரும் பயப்படுகிறார்கள்.
சந்திராஷ்டம தினங்களில் நம்முடைய மனமும், எண்ணங்களும் தெளிவானதாக இருக்காது. எனவே இந்த சந்திராஷ்டமத்தில் கட்டாயம் கோயிலுக்கு செல்வது நல்லது.. சந்திராஷ்டம நாட்களில் மனதில் சஞ்சலம் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இந்த சஞ்சலம் ஏற்படாதவாறு, கோயிலுக்கு சென்று கடவுளை வணங்க வேண்டும்.. இதனால் மனம் அமைதி கொள்ளும்.. அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்கிறார்கள்.
சந்திராஷ்டம தினத்தில் என்ன தவிர்க்கலாம்?
ராகுகாலம், எமகண்டத்தில் புதிய செயல்களை நாம் தவிர்ப்பது போல சந்திராஷ்டம நாளிலும் சில செயல்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சந்திராஷ்டம நாட்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளை தவிர்த்து விட வேண்டும்... திருமணம் போன்ற சுப காரியங்கள் நிர்ணயிக்கும்போது மணமகள், மணமகன் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம நாட்கள் இல்லாத நாட்களாக இருக்க வேண்டும்.
புதிய தொழில் துவங்குதலை தவிர்க்கலாம்.. வேறு எந்த புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.. கிரக பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு போன்ற சுப செயல்களை சந்திராஷ்டம தினங்களில் தவிர்க்கலாம்..
அதேபோல கடன் வாங்குவதை தவிர்க்கலாம்.. நீண்ட பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குறைவான தூர பயணம் என்றாலும், கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.. பதற்றம், கோபம், சோம்பல், மறதி, வாக்குவாதம் ஏற்படும் என்பதால் வீடு, மற்றும் அலுவலகங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டம தினத்தில் என்ன செய்யலாம்?
சந்திராஷ்ட நாளில் கட்டாயம் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது நல்லது. இதனால் மனதில் குழப்பத்தை அண்டவிடாமல் செய்ய தியானம் செய்யலாம்.. இதனால் மன அமைதியும் கிடைக்கும். பக்தி புத்தகங்களை படிக்கலாம்.. தர்ம காரியங்கள், அன்ன தானங்கள் செய்யலாம்.. எந்தவொரு விஷயத்தை பற்றி நினைத்தாலும், அது நல்லதாகவே இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications