குரு பூர்ணிமா.. சதுரகிரியில் குவியும் பக்தர்கள்.. கருட வாகனத்தில் உலா வரும் திருப்பதி மலையப்பசாமி
விருதுநகர்: ஆனி மாத பௌர்ணமி பூஜை மற்றும் குருபூர்ணிமாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். திருமலை திருப்பதியில் இன்றைய தினம் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் உலா வருவதைக்காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பொதுவாக அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என முக்கிய விசேஷ நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சித்தர்கள் வாழும் பூமியில் மலையேறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை சாமி தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 1ஆம் தேதி முதல் நாளைய தினம் வரை நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.
பக்தர்கள் காலை 6.30 மணிக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இன்று ஆனி மாத பௌர்ணமி மற்றும் குருபூர்ணிமா கொண்டாடப்படுவதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை கிடையது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. இன்றைய தினம் குரு பூர்ணிமாவை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.












Click it and Unblock the Notifications