கொடுமுடி நாகாபரணத்திற்கென தனி அழகு இருக்கு! ஏன் தெரியுமா? மகுடேஸ்வரர் என பெயர் வந்தது எப்படி?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நாகாபரணத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா? கொடுமுடியில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக எப்படி உருவானது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த கொடுமுடிக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: கொடுமுடி நாகாபரணம். எத்தனை நாகாபரணம் வந்தாலும் இந்த நாகாபரணதிற்கு தனி அழகு காரணம் என்னவென்று கேட்டால். இது திருப்பாண்டிகொடுமுடி அருள்மிகு ஸ்ரீ மகுடேஸ்வரசுவாமிக்கு மகுடம் போல சாத்தப்படும் நாகாபரணம் ஆயிற்றே!!!

ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி வாயுதேவன் தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்து பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின.
மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே. இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications