அழகர் "இந்த" நிறத்தில் மட்டும் பட்டாடை அணியவே கூடாது! ஆடையின் நிறத்தை தேர்வு செய்வது எப்படி?
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது அவர் அணியும் பட்டாடையின் நிறம் தேர்வு செய்யப்படுவது எப்படி தெரியுமா?
மதுரையில் சித்திரை பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் விண்ணை பிளக்க கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோஷமிட கள்ளழகர் புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.

கள்ளர் கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு என விதவிதமான ஆயுதங்களுடன் அதிர்வேட்டு முழங்க மதுரைக்கு வந்தார் கள்ளழகர். அழகரை வரவேற்க பக்தர்கள் உறங்காமல் காத்துக் கொண்டிருந்தனர். வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற 500-க்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் தங்கி இளைப்பாறி ஆசி வழங்கியபடி நேற்று அதிகாலையில் மூன்று மாவடிக்கு வந்தார் கள்ளழகர்.
அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். எதிர் சேவையின் போது பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் விண்ணை பிளந்தன. பல பக்தர்கள் கள்ளழகர் போல வேடமிட்டும், கருப்பண்ணசாமியாக வேடமிட்டும் அழகரை வரவேற்று ஆடி பாடினர்.
இதையடுத்து சித்ரா பவுர்ணமியான இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. காலை பச்சை பட்டுடுத்தி தங்க வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளினார். அப்போது கோவிந்தா கள்ளழகா என்ற கோஷம் விண்ணை பிளந்தது. அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. அழகர் எந்த நிறத்தில் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நன்மை தீமை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் அழகரின் ஆடை மீதுதான் அனைவருக்கும் கண்கள் இருக்கும்.
அந்த வகையில் பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு உடுத்தி வந்தால் விவசாயத்தில் போதிய விளைச்சல் இருக்காது. அது போல் அமைதியான சூழலும் நிலவாது. வெள்ளை மற்றும் ஊதாப் பட்டு கட்டி வந்தால் நாடு வளர்ச்சியும் இல்லாமல் சரிவையும் சந்திக்காமல் மத்திமத்தில் இருக்கும்.
மஞ்சள் பட்டாடை உடுத்தி வந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் அதிகம் நடக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு பச்சைப்பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியுள்ளதால் நாடு செழிப்பாக இருக்கும் என்பதால் பக்தர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
அழகர் உடுத்தும் ஆடையின் தேர்வு எப்படி இருக்கும் தெரியுமா? கள்ளழகருக்கான ஆடைகள், அவருடைய அணிகலன்கள் எல்லாம் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். அதில் மேற்கண்ட நிறங்களில் பட்டாடைகள் இருக்கும். அழகருக்கான ஆடை எப்படி தேர்வு செய்யப்படும் என்றால், கோயிலின் தலைமை பட்டாச்சாரியார் கண்களை மூடிக் கொண்டு அந்த பெட்டிக்குள் கையை விட்டு ஒரு உடையை எடுப்பார். அவர் கையில் என்ன நிறத்திலான ஆடை கிடைக்கிறதோ அதையே கள்ளழகர் அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குவார். இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் அழகரின் ஆடை தேர்வு நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகையில் இறங்கியதும் இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவர். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து நாளை அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும் பக்தி உலாவும் நடக்கின்றன.
காலை 9மணிக்கு திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். பிறகு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.
அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதைத் தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருள்கிறார்.












Click it and Unblock the Notifications