கந்த சஷ்டி.. சென்னை குன்றத்தூரில் 54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம்.. உற்சாகத்தில் பக்தர்கள்
சென்னை: குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள சூரசம்ஹார விழாவிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் முருக பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தலைநகர் சென்னை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குன்றத்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவில்.

சூரபத்மனைத் திருச்செந்தூரிலும், சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும், தாருகாசுரனை திருப்போரூரிலும் சூரசம்ஹாரம் செய்தார் முருகப் பெருமான். திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் "கந்தழீஸ்வரர்" என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.
சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர்.
முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
இப்படிச் சிறப்பு வாய்ந்த இந்த மலையில் கடந்த 1969 ஆம் ஆண்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் சூரசம்ஹாரம் வைபவம் நடைபெறவில்லை. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழா தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, சூரசம்ஹார வைபவம் 18 ஆம் தேதியான சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. மலையடிவாரத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூரில் எப்படி சூரசம்ஹார விழா நடைபெறுமோ அதுபோல நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தின் போது இருக்க வேண்டிய கடவுள்களின் சிலைகள் புதுப்பிக்கும் பணிக்காக வாகனங்களில் எடுத்து செல்லும் பணி நடைபெற்றது.
54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெறுவதால் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications