அழகர்மலை கள்ளழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவம் கருடக்கொடியேற்றம்.. ஆக.1ல் திருத்தேரோட்டம்
மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் கோவில் ஆடி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. உற்சவர் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. ஆகஸ்ட் 1ஆம் தேதி கள்ளழகர் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அழகர்மலை ஆன்மிக பூமி. அடிவாரத்தில் அழகர்கோயில். மலையின் நடுவே முருகனின் அறுபடை வீடான பழமுதிர்ச்சோலை. உச்சியில் ராக்காயிகோயில் என உள்ளது. இங்கு காவல் தெய்வமாக நிற்பவர் பதினெட்டாம்படி கருப்பசாமி. இவரைப் பய பக்தியுடன் வணங்கினால் மனபயம் அகலும் சகல செல்வங்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் இன்று காலையில் மேலதாளம் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. இதைதொடர்ந்து நாளைய தினம் காலையில் தங்க பல்லக்கு உற்சவமும் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்படும் நடைபெறும்.

இதனையடுத்து 26ஆம் தேதி புதன் கிழமை வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும். 27ஆம் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், சேஷ வாகனத்திலும், யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆகஸ்ட் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு புஷ்ப பல்லக்கும், 2ஆம் தேதி புதன்கிழமை 10ம் திருநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அழகர்கோயில் சொத்துகள் பெரும் களஞ்சியத்தைப் போன்றவை. அற்புதமான சொக்கத்தங்கத்தால் ஆனவர் கள்ளழகர். 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற சொலவடை மதுரைப் பகுதிகளில் பிரசித்தம். கோவிலின் பெரும் செல்வத்தை காவல் காத்து வருகிறார் கருப்பசாமி.
கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆடி பவுர்ணமி நாளன்று இரவு கள்ளழகர் கோயில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண்ணசாமி கோயில் சன்னதி கதவுகளுக்கு பரம்பரை பூசாரிகளால் சந்தனம் சாத்தப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications