மகாசிவராத்திரி..சிதம்பரம் முதல் காஞ்சிபுரம் வரை.. சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்கள் தரிசனம்
மகா சிவராத்திரி தினமான நாளை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களை தரிசனம் செய்யலாம். பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.
சென்னை: மகா சிவராத்திரி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விடிய விடிய உறங்காமல் சிவ புராணம் படித்தும் சிவனை வணங்கியும் வர நன்மைகள் நடைபெறும். எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் மகாசிவராத்திரி விரதமிருக்கும் சிவனடியார்களைக் கண்டு எமன் அஞ்சுவார் என்றும் சிவபுராணம் கூறுகிறது. மகா சிவராத்திரி தினமான இன்று பஞ்சபூத தலங்களை தரிசனம் செய்யலாம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்பொருளாகிய இறைவன் இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி ஸ்ரீகாளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு. நிலம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், நீர் ஸ்தலம் திருவானைக்காவல் கோவில், வாயு ஸ்தலம் ஸ்ரீ காலஹஸ்தி, ஆகாயம் ஸ்தலம் சிதம்பரம் கோவில், நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலை கோவில்.
ஆகாய ஸ்தலம்

சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழமையானது, பெருமை வாய்ந்தது. சிவபெருமான், நடராசராக, சிவகாமியம்மையுடன் வீற்றிருக்கும் ஆலயம். ஏனைய ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் காட்சியளிக்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாச வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பரம் ஆலயத்தில் வழிபடப்படுகிறது. இங்கு இறைவன் நடராசன் என்ற பெயரிலும் அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
வாயு ஸ்தலம்

சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் ஸ்ரீகாளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திரு மேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது.
நெருப்பு ஸ்தாலம்

மலையை சிவனாக வணங்கப்படும் தலம். நெருப்பு ஸ்தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
நீர் ஸ்தலம்

திருவானைக்காவல் பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம், அதாவது நீர்த்தலம் ஆகும். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது. மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இங்கு இருக்கும் ஜம்புலிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம் என வழங்கப்படுகிறது.
பிருத்வி லிங்கம்

காஞ்சிபுரம், தமிழகத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம். பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள். கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள். அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிசேகங்கள் நடைபெறுவதில்லை.












Click it and Unblock the Notifications