Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகா சிவராத்திரி: கன்னியாகுமரியில் நாளை சிவாலய ஓட்டம்.. எங்கும் கேட்கும் கோவிந்தா கோபாலா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவாலயங்களை பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் நடைபெறும். இந்த ஆண்டு சிவாலய ஓட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளைய தினம் தொடங்க உள்ளது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் சிவன் கோவில்களில் 'சிவாயநம' என்னும் மந்திரம் ஒலித்தாலும், குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவன் கோவில்களில் மட்டும் கோவிந்தா... கோபாலா என்னும் ஸ்ரீநாராயணனின் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கும். இதற்கு காரணம், சிவனும், நாராயணனும் வேறு வேறல்ல...இரண்டும் ஒன்று தான் என்பதை மக்களுக்கு உணர்த்தவே.

Mahashivarathiri 2024 Govinda Gopala famous Sivalaya Ottam begins from Tomorrow in Kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவடைகிறது.

110 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

சிவாலய ஓட்டத்தின் முதல் ஆலயம் முஞ்சிறை திருமலை மகாதேவர் சூலபாணி கோவில் ஆகும். இது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்ப்பட்டணம் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இரண்டாவது திருக்கோவில் திக்குறிச்சி மகா தேவர் கோவில். இது முஞ்சிறையில் இருந்து மார்த்தாண்டம் வழியாக 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திற்பரப்பு மகாதேவர் வீரபத்திரர்கோவில் சிவாலய ஓட்டத்தில் மூன்றாவது தலமாகும். திக்குறிச்சியில் இருந்து கிழக்கே அருமனை வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது.

சிவாலய ஓட்டத்தின் நான்காவது ஆலயம், திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் கோவில் ஆகும். திற்பரப்பில் இருந்து குலசேகரம் சந்திப்பு வழியாக 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில் சிவாலய ஓட்டத்தில் 5வது திருத்தலம் ஆகும்.

திருநந்திக்கரையில் இருந்து கிழக்கே 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருபன்னிப்பாகம் கிராத மூர்த்தி மகாதேவர் கோவில் ஆறாவது திருக்கோவிலாகும். பொன்மனையில் இருந்து குமாரபுரம் முட்டைக்காடு வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவில் இது உள்ளது.

கல்குளம் பத்மநாபபுரம் ஆனந்தவல்லி உடனுறை நீலகண்ட சுவாமி கோவில் 7வது ஆலயம் ஆகும். திருபன்னிப்பாகம் ஆலயத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. மேலாங்கோடு காலகாலர் கோவில் சிவாலய ஓட்டத்தின் 8வது திருத்தலம். கல்குளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

திருவிடைக்கோடு வில்லுக்குறி சடையப்பர் கோவில் 9வது திருக்கோவில் ஆகும். மேலாங்கோடு ஆலயத்தில் இருந்து தெற்கில் திருவனந்தபுரம் நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். சிவாலய ஓட்டத்தின் பத்தாவது திருக்கோவில் திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி கோவில், வில்லுக்குறி தலத்தில் இருந்து தக்கலை, கேரளபுரம் வழியாக தெற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது.

11வது திருத்தலம் திருபன்றிகோடு பக்தவத்சலர் மகாதேவர் கோவில் ஆகும். இது திருவிதாங்கோடு ஆலயத்தில் இருந்து பள்ளியாடி வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சிவாலய ஓட்டத்தின் நிறைவு ஆலயமாக விளங்குவது திருநட்டாலம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் கோவில்கள் ஆகும். திருபன்றிகோடு ஆலயத்தில் இருந்து மேற்கில் 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

சிவாலய ஓட்டம் நாளை தொடங்கும் நிலையில் பக்தர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் வகையில் தங்களைத் தயார் படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பதற்காக புத்தாடைகள், துணிப் பைகள் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துள்ளதோடு, வாகனங்களையும் பழுது பார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

சிவாலய ஓட்ட நாளில் 12 சிவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், தடையில்லாத மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்பட பல்வேறு வசதிகள் ஆலயங்களில் செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் கூறியதாவது: சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் 12 சிவாலயங்களில் ஆய்வு நடத்தப்பட்டு கோவில் மேலாளர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அமைப்புகளுடன் இணைந்து இலவச உணவுகளும் பல கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+