மண்டல பூஜை நாளில் தங்க அங்கியில் ஜொலிக்கப்போகும் சபரிமலை ஐயப்பன்.. ஆரன்முளாவில் 23ல் ஊர்வலம்
சபரிமலை: மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்படும். இந்த தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 23ஆம் தேதியன்று தங்க அங்கி ஊர்வலம் தொடங்க உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கன்னிச்சாமிகளின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

மண்டல பூஜைக்காக இந்த ஆண்டு நடைதிறக்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரைக்கும் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் மட்டும் 40 லட்சம் பேர் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டல பூஜை நாளான 27ஆம் தேதியன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்படும். இந்த தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. சபரிமலை மண்டல பூஜை காலத்தில், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
இந்த ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி ஆரன்முலா பார்த்த சாரதி கோவிலில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க அங்கி ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலம் டிசம்பர் 26 ம் தேதி பம்பை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும்.
டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். மண்டல பூஜை நாளன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்யம், அபிஷேகம், கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம், உச்சிக்கால பூஜை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை என வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் காலை 11 மணிக்கு களபாபிஷேகமும், அதைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மண்டல பூஜையும் நடத்தப்படும். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு ஹரிவராசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.
அதன் பிறகு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி நடைதிறக்கப்படும். 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதியன்று மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்றைய தினம் மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்படும்.
ஐயப்பனின் திருவாபரணங்கள் பந்தள அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வலிய கோயிக்கால் சாஸ்தா ஆலயத்தில் இருந்து திரு ஆபரணத்தை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு சபரிமலையை நோக்கி புறப்படுவார்கள். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் அந்த ஆபரணங்களை, பந்தளராஜா வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலையில் சுமந்தபடி கொண்டு செல்வார். அப்போது கருடன் கூடவே வருவதை காண பக்தர்கள் மெய் சிலிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications