திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 12: மார்கழியில் வெந்நீரில் குளிப்போரே கவனிக்க!
திருப்பாவை - பாடல் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: தோழியை எழுப்ப வந்த போது அந்த வழியால் சென்ற எருமைகள் பால் சொரிந்ததால் அந்த இடமே சேறாகி அவளுடைய வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாம். மார்கழி பனி தலையில் கொட்டுகிறது , உன் வீட்டு வாசலில் நாங்கள் நின்று கிடக்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமனாக அவதாரம் எடுத்த நாராயணனின் பெருமைகளை பாடுகிறோம். நீ எதையும் பேசாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய்! எல்லா வீடுகளிலும் எல்லாரும் எழுந்து நீராட சென்றுவிட்டார்கள், நீ மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறாய்!
விளக்கம்: எருமைகள் பாலை சிந்திவிட்டதால் உறங்கும் தோழியின் வீட்டு வாசல் சேறாக்கிவிட்டது. பனி தலையில் கொட்டுகிறது. சேற்றில் நடப்பதால் கால்களில் குளிர்ச்சி உள்ளது. தலை மேலும் பனி, இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் சிரமப்பட்டாவது இறைவனின் திருப்பாதத்தை அடைய வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் கருத்தாகும். குறிப்பாக மார்கழியில் வெந்நீரில் குளிப்போர் இதை உணர வேண்டும்.
திருவெம்பாவை பாடல் - 12
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: இப்போது கிடைத்துள்ள இந்த பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும் சிதம்பரத்தில் அக்னியுடன் நடனமாடும் வானையும் பூலோகத்தையு் பிற உலகங்களையும் காத்தும் படைத்தும் அழித்தும் விளையாடுபவனுமாகிய தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பில் உள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து சிவாய நம என்ற 5 எழுத்து மந்திரத்தை சொல்லி அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.
விளக்கம்: இறைவனே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று விஷயங்களை செய்து வருகிறார். இதை நன்றாக தெரிந்தும் சில ஆணவத்தில் திரிபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு இறைவனை அடைய வழிதேட வேண்டும்.












Click it and Unblock the Notifications