திருமண தடை ஏற்படுத்தும் ராகு கேது.. நாக பஞ்சமி நாளில் விரதம் இருந்தால் கெட்டி மேளம் கொட்டும்
சென்னை: ஆவணி மாதம் வளர்பிறை சுக்லபஞ்சமி திதியான இன்று நாக பஞ்சமி விரதமும் கருட பஞ்சமி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. நாக தோஷம் விலக நாக பஞ்சமி தினமான இன்றைய நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ராகு கேது தோஷம்: ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. திருமண தடை, புத்திரபாக்கிய தடை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீங்க ஆடி மாதம் வளர்பிறை சுக்லபஞ்சமி திதியான இன்று நாக பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மறுநாள் கருட பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பாம்பும் கருடனும்: இந்து சமயத்தில் பாம்புவுக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.
நாக பஞ்சமி விரதம்: இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
நீண்ட ஆயுள் கிடைக்கும்: நாக பஞ்சமியை முன்னிட்டு இன்று வீட்டில் பூஜை செய்தவர்கள் சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டனர். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.
பட்சி ராஜா கருடன்: நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். கருடன் என்று போற்றப்படும் பறவையை பட்சி ராஜா அதாவது பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை. பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே கருடபஞ்சமி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கருட வழிபாடு: கருட பஞ்சமி நாளில் பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு சாப்பிடலாம். பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம்.












Click it and Unblock the Notifications