நவராத்திரி.. பத்மநாபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட அம்மன் சிலைகள்.. மாற்றப்பட்ட உடைவாள்
கன்னியாகுமரி: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து அம்மன் விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. மன்னரின் உடைவாள் மாற்றி சுவாமி விக்ரகங்களை இரு மாநில போலீஸ் அணி வகுப்பு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சியில் தமிழக, கேரளா அமைச்சர்கள் இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
நவராத்திரி விழா நாட்களில் அங்கு சாமி சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படும். விழா முடிவடைந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பாரம் பரியமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி விக்ரகங்கள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு தேவாரக்கட்டு அருள்மிகு சரஸ்வதி அம்மன் திருக்கோயிலை சென்றடைந்தன. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த மார்த்ததாண்டவர்மாவின் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில அமைச்சர்கள், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை, நெற்றிப்பட்டம் சூடிய யானை அணிவகுக்கச் சுவாமி விக்ரகங்கள் புறப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் 15ஆம் தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படுவதையொட்டி, பத்மநாபபுரத்தில் இருந்து சிலைகள் ஊர்வலமாக கேரளாவிற்குப் புறப்பட்டன. இன்றைய தினம் கேரளாவில் உள்ள களியக்காவிளையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது வரவேற்கிறார். மன்னராட்சிக்குப் பின்னரும், இந்த விழா மரபு மீறப்படாமல் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications