"தலையா கடல் அலையா” பங்குனி உத்திரத்தில் அருள்பாலித்த தமிழ் கடவுள் முருகன்! பக்தர்களால் அதிர்ந்த பழனி
சென்னை: பங்குனி உத்திர நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள முருகன் திருக்கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகனை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசம் நிறைவடைந்த நிலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ஆம் தேதி திரு ஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான வருகின்ற ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வடிவமும், அதனை தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.
பதினொன்றாம் தேதி ஏழாம் திருவிழா மாநகர இன்று மாலை 4:30 மணிக்கு திருத் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் முத்தரித்து பாதயாத்திரையாக வந்து பழனிமுருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து புகழ்பெற்ற பங்குனித் தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. பழனி அடிவாரம் கிரிவீதியில் நின்ற தேரில் அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருள திருத் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி நான்குகிரி வீதிகளிலும் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.
தேரோட்டத்தில் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருகிற 14ம் தேதி புதன்கிழமை அன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைகிறது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்களில் நாள் தோறும் 20000 பேர் என மொத்தம் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications