Lunar eclipse 2023: பெனும்பிரல் சந்திர கிரகணம்..இரவில் தெரியும் வான வேடிக்கை..எங்கு பார்க்கலாம்?
சென்னை: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி நாளான இன்று வெள்ளிக்கிழமை இரவு நிகழ்கிறது. இது பகுதி சந்திர கிரகணமாக பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். இந்தியாவில் தெரியாது என்பதால் பெரிய அளவில் தோஷமில்லை. அதே நேரத்தில் இந்த சந்திர கிரகணம் எந்த நாடுகளில் தெரியும் எப்போது தெரியும் என்று பார்க்கலாம்.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.

முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.
பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். கடந்த 20ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் வரும் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று 4 மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது என்றாலும் இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியாது என்பதால் கிரகண தோஷம் எதுவுமில்லை.
இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும். இந்திய நேரப்படி இந்த பக்தி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம். வெறுகண்களால் இந்த பெனும்பிரல் கிரகணத்தை பார்க்கலாம் என கூறப்படும் நிலையில், சரியான கருவிகள் மூலம் பார்ப்பதன் மூலம் நல்ல அனுபவத்தை பெறலாம். இதை காண்பதற்கு சிறந்த பைனாக்குலர், டெலஸ்கோப் அல்லது தரமான DSLR கேமரா உதவியுடன் இந்த கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.
கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். சந்திர கிரகண நாளில் அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.
இந்த ஆண்டின் அடுத்த சந்திரகிரகணம் சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் தேதி அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 01.03 மணி முதல் இரவு 02.24 மணி வரை நிகழ்கிறது. அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.












Click it and Unblock the Notifications