பாசிட்டிவ் எனர்ஜி தரும் பிள்ளையார்.. விநாயகர் பூஜையின் போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
சென்னை: விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். விநாயகர் சதுர்த்தி நாளான இன்றைய தினம் சிலை வைத்து வழிபாடு செய்யும் போது என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று சாஸ்திர ரீதியாக சொல்லப்பட்டுள்ளது.
யானை முகத்தான் ஐந்து கரத்தான் விநாயகன். முழு முதற்கடவுள். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது 'ஓம் அநீஸ்வராய நம' என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும். ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.

விநாயகரை முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது. ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும்.
பிள்ளையாரின் யானைமுகம், துதிக்கை, கண்களையும் நோக்கினால் ஓம் என்ற பிரணவம் தெரியும். கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது.
பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும். தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு மதித்து செயல்பட்ட பிள்ளை. அம்மா அப்பாதான் உலகம் என்று உணர வைத்தவர் என்பதால் அவருக்கு பிள்ளையார் என பெயர் வந்தது. எல்லா கடவுளுக்கும் முதன்மையானவராக இருப்பதால், கோயிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவராக பிள்ளையார் உள்ளார். அதுமட்டுமில்லாமல் எளிமையாக அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டாலே நமக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கக் கூடிய கடவுளாக பிள்ளையார் உள்ளார்.
பிள்ளையார் சதுர்த்தி நாட்களில் மட்டுமல்லாது நிறைய பேரின் வீடுகளில் பூஜை அறைகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுவார்கள். தினசரியும் அருகம்புல் சாற்றி வழிபட்டாலே விநாயகரின் அருள் நம் வீட்டில் நிறைந்திருக்கும்.
விநாயகர் சதுர்த்தி நாட்களில் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடுபவர்களில் சில விசயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். விநாயகருக்கு கண்டிப்பாக தலையில் கிரீடம், குடை வைக்க வேண்டும். தலையில் கிரீடமோ, குடையோ இல்லாமல் விநாயகர் விக்ரஹமானது முழுமை பெறாது. இவ்வாறு கிரீடம் வைத்து வழிபடுவதால் அதிர்ஷ்டமும், நன்மைகளும் வந்து சேரும்.
கடையில் வாங்கிய விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி, வீட்டில் செய்த விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி, விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையையே பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். விநாயகர் சிலையில் விநாயகருடன் அவரது வாகனமான மூஷிகமும், அவருக்கு மிகவும் விருப்பமான மோதமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் பாசிடிவ் எனர்ஜி நிறைந்திருக்கும்.
விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டுமே ஸ்தாபனம் செய்ய வேண்டும். விநாயகர் சிலைக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து விநாயகரை வீட்டிற்கு வரவேற்க வேண்டும். பல விதமான பாடல்கள் பாடி, மணி ஓசை எழுப்பு உற்சாகமாக, திருவிழா கொண்டாட்டத்துடன் விநாயகரை நம்முடைய வீட்டிற்கு வரவேற்க வேண்டும்.
வீட்டில் ஸ்தாபனம் செய்யும் விநாயகரின் தும்பிக்கை வலது புறம் திரும்பியவாறு இருக்கக் கூடாது. அது வீட்டில் பிரச்சனைகளையே ஏற்படுத்தும். விநாயகரின் துதிக்கை இடது பக்கம் திரும்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் காரிய வெற்றி உண்டாகும் நன்மைகள் அதிகரிக்கும்.
விநாயகர் சிலையை எப்போதுமே வீட்டில் தனியாக வைக்கக் கூடாது. வீட்டில் எத்தனை விநாயகர் சிலை வேண்டுமானாலும். அதோடு லட்சுமி தேவியின் சிலை அல்லது சிவன், பார்வதி, முருகன் யாருடைய சிலையையாவது சேர்த்து தான் வைக்க வேண்டும். விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் அனைத்து நாட்களிலும் அவரை கவனிக்காமல் விட்டு விடக் கூடாது. தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.
வீட்டில் விநாயகரை ஸ்தாபனம் செய்த பிறகு வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிடக்கூடாது. அவல், பொரி, கொழுக்கட்டை, மோதகம் போன்றவைகளை விநாயகருக்கு படைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாட்களில் தொடங்கி வீட்டில் விநாயகர் சிலையை ஸ்தாபனம் செய்த பிறகு ஒன்றரை, 3, 5, 7, 10, 11 என்ற எண்ணிக்கையிலான நாட்களின் அடிப்படையிலேயே நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி, பூஜை செய்யாமல் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று ஒரு போதும் கரைக்கக் கூடாது.












Click it and Unblock the Notifications