Purattasi 1: இன்று பிறந்தது புரட்டாசி 1! என்னென்ன செய்யக் கூடாது! திருமணம் செய்யலாமா?
சென்னை: ஆவணி முடிந்து புரட்டாசி மாதம் இன்று தொடங்கிய நிலையில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது என்பது குறித்து காணலாம். புரட்டாசியில் திருமணம் செய்யலாமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமை பெருமாளை வழிபட மிகவும் விசேஷமானது. இறைவனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களாக ஆடியும் புரட்டாசியும் அழைக்கப்படுகிறது.

இந்த புரட்டாசி மாதத்தில் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம். புரட்டாசி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யக் கூடாது. ஆனால் 60ஆம் கல்யாணம், வளைகாப்பு, காது குத்துதல் போன்றவற்றை செய்யலாம்.
இந்த மாதத்தில் வாஸ்து நாள் இல்லாத காரணத்தால் புதிதாக வீடு கட்ட, வாஸ்து பூஜை செய்வது, புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வது, வாடகை வீடுகளுக்கோ சொந்த வீடுகளுக்கோ பால் காய்ச்சுவது போன்றவை புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடாதவை.
அத்துடன் புரட்டாசி மாதத்தில் வாடகை வீடு மாறுவதும் தவறு. நிலம், மனை வாங்கி பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
புரட்டாசியில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக் கூடிய காலமாகும். அதாவது சூரியன் தென் திசை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். புதன் பகவான் ஆளக் கூடிய கன்னிராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் புதன் பகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவை வழிபடுவதாலும் சனி, ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். வீட்டில் இருக்கும் பெருமாள் படங்களுக்கு துளசி மாலை அணிவியுங்கள். புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய அமாவாசை மகாளய அமாவாசை ஆகும். பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாட்கள் மகாளய பட்சம் ஆகும். இந்த நாட்களில் முன்னோர்களின் திதிகள் வரும். அந்தந்த திதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். காக்கைக்கு உணவளிக்கலாம்.












Click it and Unblock the Notifications