ராமேஸ்வரம் போறீங்களா? சுவாமி அம்மனுக்கு நிச்சயதார்த்தம்.. கோவிலில் நாளை தீர்த்தமாட அனுமதியில்லை
ராமநாதபுரம்: ஆடித்திருக்கல்யாண நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நிச்சயதார்த்தமும் நடைபெறுவதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளைய தினம் கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுவதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிர்லிங்க தலமாக பக்தர்களால் போற்றப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். அம்மனின் சேது சக்தி பீடம், ராமர் வழிபட்ட தலம், பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் அதி சிறப்பு வாய்ந்த அற்புத சிவஸ்தலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். பல்வேறு சிறப்புகள் கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 11ஆம் நாளான நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது.
மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
24ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. வரும் 29ஆம் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு ஆடி திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications