சபரிமலை மண்டல பூஜை.. மகர விளக்கு பூஜை.. ஐயப்பனை தரிசித்த 50 லட்சம் பேர்.. ரூ.357.47 கோடி வருமானம்
சபரிமலை: ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜை காலங்களில் 50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று மண்டல கால பூஜைக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 17ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 27ஆம் தேதி வரை மண்டலபூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கடந்த 15ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இன்று இரவு 10 மணியுடன் பக்தர்களுக்கான தரிசன காலம் முடிகிறது. ஹரிவராசனம் பாடி கோவில் நடை இன்றிரவு அடைக்கப்படும். நாளைய தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்படும். பந்தளம் ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு காலை 6 மணியுடன் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான மகரவிளக்கு வழிபாட்டு காலம் நிறைவடைகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தா்களின் வருகையும், வருமானமும் அதிகரித்துள்ளது. நடப்பு 2023-24 ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909) என்று தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ரூ.347,12,16,884 வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ரூ. 10.35 கோடி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.
இதில் அரவணை மூலம் ரூ. 146 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது அப்பம் மூலம் ரூ. 17 கோடியே 64 லட்சம் ரூபாயும், பக்தா்களின் காணிக்கையும் சேர்த்து ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
பக்தர்கள் காணிக்கையாக அளித்த பொருட்கள், நாணயங்களை கணக்கிடப்படவில்லை என்றும், கணக்கிட்டால் இன்னும் குறைந்தது 10 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த முறை 50 லட்சம் (50,06412) பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். கடந்த சீசனில் 44 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் இந்த முறை கூடுதலாக 5 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர் என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. திருப்பதி மாடலை அறிமுகம் செய்த காரணத்தால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல், பந்தளம் சென்று இருமுடி செலுத்திய நிகழ்வும் நடைபெற்றது. பல பக்கர்கள் எருமேலியுடன் திரும்பிய நிகழ்வும் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் நெரிசலின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications