சாமி திந்தக தோம் தோம்..ஐயப்பன் திந்தக தோம் தோம்..எருமேலி பேட்டை துள்ளல்..ஆட தயாராகும் பக்தர்கள்
சபரிமலை: ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் எருமேலியில் காட்டுவாசிகள் போல வேடமிட்டு சாமி திந்தக தோம் தோம்..ஐயப்பன் திந்தக தோம் தோம் என்று கோஷமிட்டு தெய்வீக ஆட்டம் ஆடுவது வழக்கம். மகரஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக நடக்கும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலக்குழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினர் நடத்தும் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. இதையொட்டி நாளை காலை சுமார் 11 மணியளவில் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற உள்ளது.
சபரிமலைக்குச் செல்ல மரபுவழிப்பாதை எருமேலியிலிருந்துதான் தொடங்கும். இங்கு பேட்டை துள்ளி நீராடி பக்தர்கள் புறப்படவேண்டும். இங்கு சாஸ்தாவிற்கு சிறியதும், பெரியதுமாக இரண்டு கோயில்கள் உண்டு. இந்த இரு கோவில்கள் தவிர வாவர் மசூதியிலும் வழிபாடுகள் நடக்கும்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி தர்மசாஸ்தா கோவில், ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது. ஐயப்ப பக்தர்களின் முக்கியமான சந்திப்பு இடமாக இது திகழ்கிறது. பேட்டா தர்மசாஸ்தா கோவில் என்றும் இதனை அழைக்கிறார்கள். எருமேலியில் ஐயப்பன் வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
சபரிமலை தர்மசாஸ்தாவை தரிசனம் செய்யும் முன்பு கன்னி சாமிகள் பேட்டை துள்ளி வேடமிட்டு பக்தர்கள் நடனமாடுவார்கள். ஐயப்ப பக்தர்கள் உடலில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் என்று ஆடிப்பாடி மகிழ்வர். முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னிசாமிகள் எருமேலி வந்து செல்வது வழக்கம்.
சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்த போது தேவர்களும், இப்பகுதியில் வசித்த மலைவாழ் மக்களும் ஆடிப்பாடி அதனை கொண்டாடி உள்ளனர். இதனை நினைவு கூறும் விதமாகவே எருமேலியில் பேட்டை துள்ளல் ஆடுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மண்டல சீசனில் பக்தர்கள் தினந்தோறும் பேட்டை துள்ளல் ஆடினாலும், மகர ஜோதிக்கு முன் நடத்தப்படும் பேட்டை துள்ளல் நிகழ்வே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐயப்பன் சாமிகள் உடலில் பல விதமான வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டு நடனம் ஆடுவர்.

ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகள் மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான எருமேலி பேட்டை துள்ளல் ஜனவரி 11ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் அம்பலப்புழ குழு மற்றும் ஆலங்காட்டுகுழு ஆகிய குழுக்கள் பேட்டை துள்ளலில் பங்கேற்கும். 12ஆம் தேதி மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது.
ஜனவரி 13ஆம் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வரும் 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 19ஆம் தேதியுடன் இவ்வாண்டு மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகபுறத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். 20ஆம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறும்.

மகரவிளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் சீராகவும், பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டுடன் நடத்தவும் கேரள காவல்துறையின் புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் புதிய குழு பொறுப்பேற்றுள்ளன. மூன்று இடங்களிலும் அதிகாரிகள் உட்பட 2958 பேர் பாதுகாப்பு சேவையில் உள்ளனர். மகரஜோதி நாளில் மேலும் கூடுதலாக 5 டி.எஸ்.பி.க்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் மகரவிளக்கு உற்சவம் முடிந்து நடை சாத்தும் வரை சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். . பொது பாதுகாப்பு, கருவூல பாதுகாப்பு,உளவுத்துறை, தொலைத்தொடர்பு போன்றவற்றுக்கு தனியாக சிறப்பு குழுக்கள் உள்ளன. இது தவிர, இந்த சேவையில் என்டிஆர்எப் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் பணியாளர்களும் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் மகர ஜோதி தரிசனத்துக்கான ஏற்பாடுகள் பல்வேறு துறைகள் தலைமையில் நிறைவடைந்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications