காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா! ஜில்ஜில் கிளைமேட்..சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்! திணறும் சன்னிதானம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை கனமழை காரணமாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து இருந்த நிலையில் தற்போது மிதமான வெயிலுடன் இதமான காலநிலை நிலவுவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து அன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு நடை சாற்றப்பட்டு பின்னர் மூன்று மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பின்னர் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில் பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயன் ஐயப்பன் துயில் செல்கிறார். இந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முன்பு வரை சபரிமலை உள்ளிட்ட கேரளா முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கட்டும் குளிர் நிலவிய நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை குறைந்து மிதமான வெயிலும் மிதமான காலநிலை நிலவுவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பம்பை, சன்னிதானம், படிப்பாதை, மர கூட்டம், நீலிமலை கடந்து சரங்குத்தி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி அனைத்தும் மலைப் பாதை என்பதால், பக்தர்கள் களைப்படைய வாய்ப்புள்ளது. காரணமாக பக்தர்கள் ஆங்காங்கு அமர்ந்து இளைப்பாற இருக்கை வசதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
இதமான காலநிலை நிலவுவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் இறுதியில் தரிசனம் செய்ய தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தரிசனம் செய்ய இரண்டு மணி நேரம் காத்திருந்த நிலையில் தற்போது மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications