சனி நீராடு.. முன்னோர்கள் ஏன் சொல்றாங்க தெரியுமா? எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாத நாள் எது?
சென்னை: எண்ணெய் தேய்த்து குளிப்பது நமது பாரம்பரியம். நம்முடைய முன்னோர்கள் 'சனி நீராடு' என்று சொல்லி வைத்துள்ளனர். சனி பகவானுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் என்ன பலன் கிடைக்கும். எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
சனிக்கிழமை ஆண்கள் தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்துக்கொள்ளலாம். ஆனால் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது ஆரோக்கியம்.

பொதுவாகவே தலையில் உடம்பில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இளநரை வராது. சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும். சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியம். பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும்.
இன்றைக்கு பித்தமும் உடல் சூடும் அதிகரித்து இருக்கிறது. நல்லெண்ணெய் குளியல் பித்தம், உடல் சூட்டை தணிக்கிறது. தோல் வறட்சி நீங்கும். ரத்த ஒட்டம் சீராக இருக்கும். எண்ணெய் குளியல் மன அழுத்தத்தை நீக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவேதான் வாரம் இருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.
சனி பகவான் ஆயுள் காரகன். நம்முடைய உடலை ஆரோக்கியமாக காத்து ஆயுளை நீட்டிக்கக் கூடியவன் சனிபகவான். எனவேதான் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதன்கிழமை ஆண்களும், வெள்ளிக்கிழமை பெண்களும் எண்ணெய் தேய்த்துக்குளிக்க வேண்டும்.
நரம்பு நாயகன் புதன் கிரகம் ஆதிக்கம் செலுத்தும் நாள் புதன்கிழமை நம்முடைய புத்தி செயல்பட வேண்டும். புதன்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் நரம்பு பிரச்சினை நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறப்பல்ல. அவர்கள் அழகை இழப்பார்கள். சூரியன் சனி பகை கிரங்கள் எனவேதான் ஞாயிற்றுக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து
குளிக்கக்கூடாது என்று சொல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை சூரியனின் தாக்கம் அதிகம் பெற்ற நாள். அந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் சுறுசுறுப்பு குறையும் முகத்தில் பொலிவு குறையும்.
அதேநேரத்தில் தீபாவளி பண்டிகை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை வந்தால் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆர்த்தடீஸ் பிரச்சினை உள்ளவர்கள் நோய்கள் நீங்க செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனி, புதன்,வெள்ளி ஆகிய நாட்கள்தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வெது வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். அரைமணிநேரம் ஊற வைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு கலப்படம் எதுவும் இல்லாத அரப்பு, சீயக்காய்தான் பயன்படுத்த வேண்டும்.
இன்றைய பரபரப்பான காலத்தில் இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலை மறந்தே விட்டனர். வீக் என்ட் கலாச்சாரத்தில் உள்ளவர்கள் தீபாவளி நாளிலாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் ஓய்வு எடுப்பது அவசியம். குளிர்ச்சியான தயிர், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் அசைவ உணவு தவிர்க்க வேண்டும் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications