தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா.. மக்கள் வெள்ளத்தில் தங்கத் தேர் பவனி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்து வரும் பனிமயமாதா பேராலய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் தூத்துக்குடியில் திரண்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள உலகபிரசித்தி பெற்ற திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா எனப்படும் பனிமயமாதா பேராலயத்தின் 441வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது.

முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட நூற்றாண்டை முன்னிட்டு 16வது தங்க தேர் இந்த ஆண்டு நடப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று 4ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கோவை உயர்மறை மாவட்ட பிஷப் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. விழாவின் சிகரமாக இன்று அதிகாலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், 7 மணிக்கு கோவா உயர் மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப்நேரி தலைமையில் தங்கத் தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்வினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இமானுவேல் பர்னான்டோ ஆகியோர் அர்ச்சிப்பு செய்ய அன்னையின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு இலங்கை மன்னார் பிஷப் இமானுவேல் பர்னான்டோ தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது.
பனி மய அன்னையின் தங்க தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 53 மணி ஜெபமாலையை வைத்து கத்தோலிக்கர்கள் ஜெபிக்கிறார்கள். அதனை குறிக்கும் வகையில் 53 அடி உயரம் கொண்டதாக தங்கத் தேர் அமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தேரில் பவனி வந்த பனிமயமாதாவை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் தங்கத் தேர் பவனி வந்தது. பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications