திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. குவியும் பக்தர்கள்.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்: முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.

வெற்றி வேல் வீர வேல்: யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனையும், யாகசாலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்தசஷ்டி: திருவிழாவின் ஆறாம் நாள் கந்த சஷ்டி நாளைய தினமாகும். சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.
சூரசம்ஹாரம்: நாளைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.
சூரனை வதம் செய்யும் ஜெயந்திநாதர்: மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்படும் . மேலும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவிந்த கூட்டம்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. நாளைய தினம் சூரசம்ஹார விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் மூடல்: கந்த சஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடைபெறுவதால் நாளை ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை மற்றும் விற்பனை கடைகளான, கடை எண் 1. 9991 அடைக்கலாபுரம் பகுதி, ஆறுமுகநேரி மெயின் ரோடு வீரபாண்டியன் பட்டணம், திருச்செந்தூர் கடை எண் 2. 1049 சங்கிவிளை, பரமன்குறிச்சி சாலை திருச்செந்தூர், கடை எண் 3. 10153 பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர், கடை எண் 4. 10154 தடையில் முகவரி 264/13 குலசை மெயின் ரோடு, திருச்செந்தூர் ஆகிய 4 கடைகள் மட்டும் மூடபட்டிருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு: அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தல் ,மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications