திருப்பதியில் நாளை கருட சேவை! இன்று முதல் மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் வர தடை
திருப்பதி: திருப்பதியில் கருட சேவையையொட்டி இன்று முதல் திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் என்பதாலும் பிரம்மோற்சவம் என்பதால் திருப்பதிக்கு ஏராளமான மக்கள் வருகை தருகிறார்கள்.

இதனால் திருப்பதி முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் ரூ 3.5 கோடி செலவில் 60 டன் மலர்களால் திருப்பதி ஏழுமலையான் கோயில் அலங்கரிக்கப்படுகிறது. சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிரம்மோற்சவம் முடியும் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் சிறப்பு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 8 லட்சம் லட்டுகள் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 20 உதவி மையங்களும் அமைக்கப்படுகிறது.
திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த 23 ஆம் தேதி ஆகம விதிகளின்படி கோயில் சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் வாகனங்களின் மராமத்து பணிகள் நடந்தன. வாகனங்களைக் கண்காணிக்க 36 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. அன்றைய தினம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக செலுத்தினார்.
இந்த 9 நாட்களில் முக்கியமானது கருடசேவைதான். இது திருப்பதியில் நாளை நடைபெறுகிறது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் வீதியுலா வருவார். இந்த கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதிக்கு வரும் வாய்ப்புள்ளதால் திருமலை, திருப்பதியில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பதி எஸ்பி சுப்பராயுடு கூறுகையில், கருட வாகன சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் வரும் 29ஆம் தேதி காலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதை சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் முடிந்தவரை பொது போக்குவரத்து மூலம் திருமலைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். திருப்பதியில் கருடசேவை தினத்தன்று பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் க்யூ ஆர் கோடு மூலம் வாகன பார்க்கிங் இருக்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருட சந்திப்பு, அலிபிரி டோல்கேட் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள், அதிநவீன டிரோன் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன. திருட்டைத் தடுக்க, கூடுதல் எஸ்பி தலைமையில் நமது மாநிலம் மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் 300 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி எண் 112-க்கு அழைக்கவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications