திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றம்.. பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் திருமலை.. குவியும் பக்தர்கள்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மொற்சவம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினசரியும் காலையும் மாலையும் மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலிப்பார்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில் இன்றைய தினம் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் வெகு விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழாவில் அங்குராற்பன நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து திங்கட்கிழமை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் கொடிமரம் முன்பாக எழுந்தருளுவார். இதனையடுத்து கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட தர்பை மற்றும் சணல் கயிற்றால் கருடன் சின்னம் பொறிக்கப்பட்ட பிரம்மோற்சவ கொடியானது மேளதாளங்கள் முழங்க ஏற்றப்படும்.
இன்று மாலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன், கோயிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பார். இரவு மலையப்பசுவாமி பூதேவி ஸ்ரீதேவி சமேதராக பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். தினசரியும் காலையும் மாலையும் மாட வீதிகளில் மலையப்பசுவாமி உலா வந்து அருள்பாலிப்பார். எந்த நாளில் என்ன வாகனம் என்று முழு விபரத்தையும் பார்க்கலாம்.
19 ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகனம் இரவு ஹம்ச வாகனம். 20ஆம் தேதி காலையில் சிம்ம வாகனம் இரவு முத்துப்பந்தல் வாகனம்
21ஆம் தேதி காலையில் கற்பக விருட்ச வாகனம் இரவு சர்வபூபால வாகனம். 22ஆம் தேதி காலையில் மோகினி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பார். இரவு கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளுவார். கருடவாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசுவாமியைக் காண 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள்.
23ஆம் தேதி காலையில் ஹனுமந்த வாகனம் இரவு கஜ வாகனம் 24ஆம் தேதி காலையில் சூரிய பிரபை வாகனம் இரவு சந்திரபிரபை வாகனம். 25ஆம் தேதி ரத உற்சவம் தேரோட்டம் நடைபெறும். 26ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பல டன் மலர்களால் திருமலை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது திருமலை ஏழுமலையான் கோவில்.












Click it and Unblock the Notifications