கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய திருப்பதி பிரம்மோற்சவம்! பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் உலா
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் வந்து பட்டு வஸ்திரத்தை சாத்தினார். மேலும் பிரம்மோற்சவ விழாவும் நேற்று கருட கொடியேற்றத்துடன் சிறப்பாக நடந்தது. நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளிலும் உலா வந்தார்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அந்த தங்கக் கொடி மரத்தின் ஒரு பகுதியான வளையம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் அதை சரி செய்ததுடன் மாலை விழா கோலாகலமாக நடந்தது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தங்கக் கொடி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். அப்போது மேளதாளங்கள் முழங்கின.
வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓத கருட சின்னம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது கோவிந்தா, கோவிந்தா, ஓம் நமோ நாராயணா என பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் ஜீயர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து திருமலைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவியுடன் வந்திருந்தார்.
அவர் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரத்தை தலையின் மீது சுமந்து வந்து கோயில் அர்ச்சகர்களிடம் கொடுத்தார். பின்னர் ஏழுமலையானை தரிசித்தார். ரங்கநாயக மண்டபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அர்ச்சகர்கள் கோயில் பிரசாதங்களை வழங்கினர்.
பெரிய சேஷ வாகனம்: பிரம்மோற்சவ விழா தொடங்கிய நேற்று இரவு மலையப்பர் சுவாமி பெரிய சேஷ வாகனத்தின் மீது எழுந்தருளினார். இந்தநிகழ்வில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.
பெரிய சேஷ வாகனத்தின் முன்பு காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடினர். இன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்திலும் மலையப்பர் 4 மாடவீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.












Click it and Unblock the Notifications