திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு.. புனித நீராடல்
திருப்பதி: திருமலையில் கடந்த 8 நாட்களாக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது. சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் கருடக்கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 22ஆம் தேதி இரவு நடைபெற்றது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மறுநாள் காலையில் அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்தார். மாலையில் தங்க ரதத்தில் எழுந்தருளிய சுவாமி இரவு கஜ வாகனத்தில் வலம் வந்தார். மறுநாள் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளினார்.
மலையப்பசுவாமியின் ஊர்வலத்தின் முன்னே யானைகள் வலம் வர ஏராளமானோர் பாரம்பரிய நடனங்கள் ஆடி வந்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கல்கி அவதார நோக்கத்தை உணர்த்தும் வகையில் நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 9வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு வராக சாமி கோவில் முக மண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் ஆகியவை நடத்தப்பட்டன.
இதனையடுத்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள் மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது. ஏழுமலையானின் பிரம் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களில் மட்டும் பல லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கருட சேவை நாளன்று மட்டும் பல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. உண்டியல் மூலம் பக்தர்கள் பல கோடிக்கணக்கான ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications