அழகென்ற சொல்லுக்கு முருகா! வைகாசி விசாகம் எப்போது? குழந்தை வரம் கிடைக்க என்ன விரதம் இருக்க வேண்டும்?
சென்னை: வைகாசி விசாகம் எப்போது என்பது குறித்தும், அன்றைய தினம் குழந்தை வரம் கிடைக்க விரதம் இருப்பது எப்படி என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம். முருகனுக்கு உகந்த நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.
வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் தான் அவர் அவதரித்தார். வைகாசி என்ற பெயரில் புண்ணிய தலமான காசி என்பதும் வருவதால் அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. வைகாசி பவுர்ணமியில் சிவனுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த வைகாசி விசாகம், முருகன் கோவில்களில் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று, பல பக்தர்கள் பால்குடம், காவடிகளை ஏந்தி, கந்தனின் அருளைப் பெற சுப்பிரமணியர் கோயில்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள்.
அறுபடை வீடுகள் மட்டுமின்றி பிற முருகன் ஆலயங்களுக்கும் ஏராளமானோர் சென்று வழிபடுவது உண்டு. இந்த வைகாசி விசாகம், ஜூன் 9 ஆம் தேதி, நாளை கொண்டாடப்படுகிறது. நாளை விசாக நட்சத்திரம் மாலை 4.40 மணி வரை உள்ளது. ஆனால் ஜூன் 10 ஆம் தேதி பகல் 12.27 மணிக்குதான் பவுர்ணமி திதி தொடங்குகிறது.
இதனால் ஜூன் 9ஆம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் வைகாசி விசாகத்திற்கு விரதம் இருப்பவர்கள், அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம். வைகாசி விசாகத்தன்று சந்திரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு செல்லவிருக்கிறார்.
முருகன் கோவில்களில் பால் குடம் எடுப்பது, காவடி எடுப்பது போன்றவைகளை செய்வார்கள். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும், துன்பம் நீங்கும். இந்த நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும்.
குழந்தை பேறு உண்டாகும். நம் குலம் தழைத்து விளங்கும். குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு சஷ்டியில் விரதம் இருப்பார்கள். ஆனால் அவர் அவதரித்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும் என நம்பப்படுகிறது.
நாளை விரதம் இருக்க விரும்புவோர் நாள் முழுவதும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாவிட்டால் ஒரு வேளை உணவ மட்டும் சாப்பிடலாம். பால், பழம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். கந்த சஷ்டி கவசம் , திருப்புகழ் படிக்கலாம். எனவே இந்த வைகாசி விசாகத்தில் விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications