பிள்ளையார் சுழியில் இத்தனை விசயம் இருக்கா? தோஷம் நீங்கும்.. காரிய வெற்றி தரும் கணபதி ஜாதகம்
சென்னை: விநாயகரை வணங்கித்தான் எந்த செயலையும் தொடங்குகின்றனர். எழுதும் முன்பாக 'உ' என்று பிள்ளையார் சுழி போட்டுதான் எழுதப்படுகிறது. இதன் உண்மையான தத்துவம் என்ன என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள இந்த நேரத்தில் விநாயகர் ஜாதகம் பற்றியும் விநாயகரை வழிபடுவதால் என்னென்ன தோஷங்கள் நீங்கும் என்பதைப்பற்றியும் பார்க்கலாம்.
பிள்ளையார் சுழி ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து 'உ' என்று எழுதுவார்கள். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, வட்டத்தை 0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டினை நாதம் என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை நாதபிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக கூறப்படுகின்றது.

விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக 'உ' என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு. விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய 'உ' என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.
'உ' என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது. வட்டத்தைத் தொடர்ந்து வரும் கோடு வளைந்து, பின் நேராகச் செல்லும். இதனை 'ஆர்ஜவம்' என்பார்கள். இதற்கு 'நேர்மை' என்று பொருள். 'வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே' என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்குபவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. வரும் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவார்கள். சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவை.
விநாயகர் விருச்சிக லக்னத்தில் ஹஸ்த நக்ஷத்திரத்தில் கன்னி ராசியில் அவதரித்தவர். லக்னத்தில் கேது மூன்றாமிடமாகிய தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம். ஏழில் சனி, ராகு, ஒன்பதாமிடமாகிய பாக்கிய ஸ்தானத்தில் குரு உச்சம், பத்திலே சூரியன் ஆட்சி, பதினொன்றாம் வீடாகிய கன்னியில் சந்திரன் உச்ச புதன் மற்றும் நீச சுக்கிரனுடன் சேர்ந்து நிற்கிறார்கள். விருச்சிக ராசியை லக்னமாக கொண்டவர்கள் அளவிலா ஞானத்தையும் எப்படியாவது அடுத்தவரை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.
மாம்பழத்துக்காக தாய்தந்தையை சுற்றி தம்பியை வென்ற சாதுர்யம் யாருக்கு வரும்? கேது பகவான் விநாயகரின் ஜாதகத்தில் லக்னத்தில் நின்று தன் ஞானகாரகத்தை சிறப்புற அமைத்துக்கொண்டார் என்பதுதான் சரியாக இருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து காரியங்களுக்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.
விநாயகரின் பானை போன்ற வயிறு பிரம்மனின் அம்சமாகவும், அவரது முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடது பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலதுபாகம் சூரியனின் அம்சமாகவும் மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளங்குகிறது. எனவேதான் முழுமுதற்கடவுளாக விநாயகரை வழிபடுகின்றோம்.
விநாயகர் கேதுவின் அம்சமானவர். கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் எளிமையானவர்களாக இருப்பார்கள். அரசமரத்தடியில் வசிப்பதற்க்கு இதுவே காரணம் எனலாம். தனம், வாக்கு குடும்பம் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியாகிய குரு பாக்கியஸ்தானத்தில் உச்சம். ஆகவே மிகவும் செல்வாக்கும் சொல்வாக்கும் நிறைந்தவர். பணம் நிறைந்த மும்பைவாசிகளும் வட இந்தியர்களும் விநாயகரை வணக்கும் ரகசியம் இதுதான்.
யானையின் காரகர் குரு பாக்கியஸ்தானத்தில் உச்சமானது யானையின் தலையை முகமாக கொள்ளும் பாக்கியத்தை தந்தது. மூன்றாம் வீடாகிய தைரிய, சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் உச்சமாகி வேகத்தின் அதிபதியாகிய குமரக்கடவுளே சகோதரராக அமைந்தது வியப்பல்லவா! மேலும் மூன்றில் செவ்வாய் காரகோபாவ நாஸ்தி என்பார்கள். ஆனால் அதை உடைக்கும் வண்ணம் மோகினி பாலனான ஸ்ரீ ஐயப்பனையும் சகோதரனாக அடைந்ததையும் குறிப்பிட வேண்டும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகைவீட்டில் நின்றது பழத்திற்காக சகோதரனயும் எதிரியாக்கியது. நான்காம் அதிபதி சனி நட்பு வீடாகிய ரிஷபத்தில் சனி ராகுவோடு சேர்ந்து நின்றது தாயாரின் அளவில்லா பாசத்திற்கு காரணமாகியது.
விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட உள்ளம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும். இந்த ஜாதகத்தை வியாபார இடத்தில் வைத்தால் வியாபார விருத்தி ஏற்படும். சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.
மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருட்களெல்லாம் சனிதான் காரகர். நிலத்தை தோண்டுவதும் சனிதான் காரகர். வாகன ஸ்தானாதிபதியாகிய சனி திக்பலம் பெற்றது நிலத்தை குடைந்து செல்லும் எலியை வாகனமாக்கியது ஆறாம் வீட்டதிபதி மூன்றில் உச்சமானது அனைவரின் கடன் நோய் எதிரிகளை களைவதில் முதன்மையானவர் என்கிறது. ஏழில் சனி நின்றால் திருமணத்தடை என்பார்கள். கால தாமத திருமணம் என்றும் கூறுவார்கள்.
ஏழிலே சனி திக்பலம் பெற்று ராகுவோடு சேர்ந்து நின்றதும் ஏழாமதிபதி கன்னியில் நீசமடைந்ததும் தென்னிந்தியாவில் திருமணமாகாதவராக நிறுத்தியது. பின் புதனோடும் சந்திரனோடும் சேர்ந்து நீசபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தியதால் வட இந்தியாவில் சித்தி புத்தி எனும் இருவரின் மணாளனாக்கி மாப்பிள்ளை விநாயகராக்கியது. மறைந்த புதன் நிறைந்த கல்வி என்பார்கள். எட்டு பதினோறாம் வீட்டின் அதிபதியான புதன் காலபுருஷனுக்கு மறைவு ஸ்தானமான கன்னியில் நின்றது நான்கு வேதங்களும் விநாயகரிடம் பணிந்து நின்றது.
பாக்கியஸ்தானமாகிய கடகத்தில் குரு உச்சம் பெற்றதும் பாக்கிய ஸ்தானாதிபதி கன்னியில் நின்றதும் நித்திய ப்ரம்மசாரியான இவரை பல கன்னிப்பெண்கள் திருமண பாக்கியம் வேண்டி சுற்றி சுற்றி வர செய்தது. பத்தாமதிபதி சூரியன் பத்திலே ஆச்சி பெற்றது எதிலும் முதல்வராக்கி முழுமுதற்கடவுளாக்கியது. மேலும் அனைத்து இடங்களிலும் சூரியனைபோல் நீக்கமற வியாபித்து நிற்க செய்தது. மேலும் பல அசுரர்களை போரில் வெற்றிகொள்ள வழிவகுத்தது. பதினோறாம் வீடு ஆசைகளை நிறைவேற்றும் இடம். இங்கு புதன் உச்சம் ஆகி உணவின் காரகர் சந்திரனோடு சுவையான உணவின் காரகர் மற்றும் இனிப்பின் காரகர் சுக்கிரன் நீசபங்க ராஜயோகத்தை பெற்றதால் மோதகப் பிரியராக்கியது.
விநாயகரின் ஆசையே கொழுக்கட்டைதான். கையினை குறிக்கும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பிறந்ததால் கையில் எப்போதும் கொழுக்கட்டை மற்றும் மோதகத்தை ஏந்தி நிற்க செய்தது. குரு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் பொதுவாக குண்டாக இருப்பார்கள். உணவின் காரகர்கள் காலபுருஷனுக்கு வயிற்றை குறிக்கும் இடத்தில் நின்றதாலும் போஜன ஸ்தான குரு உச்சம் பெற்றதாலும் உலகத்தையே தொப்பையாக பெற்று உலகில் உணவு பஞ்சத்தை போக்குகிறது. பன்னிரெண்டாமதிபதி சுக்கிரன் நீசபங்க ராஜயோகமடைந்ததால் காமத்தை வென்ற நித்திய பிரம்மச்சாரியாக்கியது. பலரின் புத்திர தோஷத்தை தீர்க்கும் அமைப்பானது. விநாயகர் சதுர்த்தி நாளில் மறக்காமல் விநாயகரை வணங்குங்கள். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications