Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பது ஏன்? காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயில் கோபுரங்களில் ஆபாசமாக சிலைகள் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரா.பாலா என்பவர் கூறியிருப்பதாவது: பாலியல் இந்து மரபில் ஆபாசமாக, மறைக்கப்பட வேண்டியதாக ஒருகாலமும் இருந்ததில்லை. மனித உடல் பிரபஞ்சத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. எனவே மனித உடலை உருவாக்கும் பாலியல் சக்தி மூலாதார சக்தி எனவும் பிரம்மத்தின் செயல் எனவும் தாந்திரீக மரபில் கருதப்பட்டது.

spirtuality temple gopuram


கோவில்களில் ஆபாசச் சிலைகள் மட்டுமல்ல எல்லாவிதமான சிலைகளும் உள்ளன. மனித வாழ்க்கையைப் பேசும் சிலைகள் அவை. இவற்றில் உடலுறவுச் சிலைகளும் காமம் சார்ந்த சிலைகளும் அடக்கம். சிலைகளெல்லாம் குறியீட்டு முறைகளினாலானவை. பக்தி மேலோங்கியபோது நாம் அக்குறியீடுகள் பற்றி யோசிப்பதில்லை.

இச்சிலைகளெல்லாம் சாக்த மரபிலிருந்து வந்தவை. சாக்தம் பிரபஞ்ச ஆற்றலை பெண்ணாக உருவகித்தது. அதையே சக்தி என்கிறோம். எனவே பெற்றெடுத்தலும் முலையூட்டலும் ஆதார சக்தியாகக் கண்டது. பெண் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்தீர்களானால் யோனியைக் காட்டுவது போன்ற நிலையில் அமர்ந்திருக்கும். பெண்ணின் யோனி படைப்பாற்றலாக கருதப்பட்டது.

சாக்த மரபில் யோனி மிக விரிவான பொருள் கொண்ட ஒன்று. தத்துவ நோக்கில் நம்மால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. சிலைகளின் யோனிக்கும் சிலைகளின் விளிம்புகளுக்குமிடையேயான தூரத்திற்கு மிகமிக சிக்கலான கணித சூத்திரங்கள் உண்டு.

படைப்பின் மையமாக யோனியைக் கருதுவது போல இக்கேள்விக்கான எனது பதிலை (இதுவும் எனது படைப்பு எனும் பாங்கில்) ஓர் யோனியாகக் கருதி இதை நான் தத்துவார்த்தமாக வளர்த்தெடுக்க இயலும். ஏனெனில் இதுவே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி. (சாக்த மரபில்) கேரளம் சாக்த மரபினைக் கொண்டது. (வங்காளமும் அப்படியே) கேரள பகவதி கோவிலில் ஒரு மண்டலம் விரதமிருந்து கெட்ட வார்த்தைகளால் தேவியை வாழ்த்தியபடி பல கிலோமீட்டர்கள் பயணித்து பிச்சை எடுத்து கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. இவையெல்லாம் தாந்திரீக முறை. ஒரு சாதாரண ஆச்சார இந்துவுக்கு இவையெல்லாம் ஆச்சரியமளிக்கும் விசயம். கன்னி பூஜை, யோனி சேவை, சகசயனம் (காந்தி இதை முயற்சித்தார்) ஆகியவை இந்து மதத் தரிசனத்தின் ஒரு பகுதியே.

நாம் பக்தியின் மீதுள்ள மோகத்தினால் தாந்திரீகத்தினை வெறுத்து ஒதுக்கிவிட்டோம். ஆபாசச் சிலைகள் நம் ஒழுக்க உணர்வைச் சீண்டுவதற்கான காரணம் நமக்கு அதன் தத்துவப் பின்னணி புரியாததே.

இந்து மதம் என்பது சைவம், வைணவம், சாக்தம், செளரம், கொளமாரம், காண்பத்தியம் என ஆறு தத்துவ தரிசனங்களை உள்ளடக்கியது. கோமாதாவை வணங்குவது மட்டுமே ஹிந்து மதம் கிடையாது. பசுவைப் பலிகொடுப்பதும் இந்து மரபில் இருந்தது. நாம் இந்து மதம் என்பதை ஒற்றைப் படையாகச் சுருக்கிப் பார்ப்பதால் நமக்கு அதிர்ச்சியாயிருக்கிறது.

பல ஆயிரம் வருடங்களாக நம் ஞான மரபு, தொடர்ச்சியான சிந்தைகளின் விளைவாக உருவான ஒன்று. சில இடங்களில் புனிதம் எனக் கருதுபவை வேறு இடங்களில் புனிதமாக இருப்பதில்லை. கோவிலில் பெண் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலையைக் கும்பிடும் நம்மால் நம் வீட்டுப் பெண்கள் அவ்வாறு அமருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஓர் அத்வைதிக்கு காளியும் கிம்கடாசியானும் ஒன்றுதான்.

ஆண்களின் Penis செயல் ஆற்றலாகவும் பெண்களின் Vagina விளைவு ஆற்றலாகவும் கருத்தில் கொண்டு பிரபஞ்சத்தின் முரணியக்கமான கருத்து X ஆற்றல் என்பதைப் உணர்ந்து கொண்டவர்கள் முன்னோர். அவர்களால் ஆன்மீகத்தில் அதிக தொலைவு முன்னகர முடிந்தது.

கோவில் என்பது இறைவனை வணங்கவும், பரிகாரம் செய்யவும், சடங்குகளைக் கடைபிடிப்பதற்குமான இடம் மட்டுமல்ல. கோவில் ஒரு பண்பாட்டு மையமாகவே பண்டைய காலதில் இருந்திருக்கிறது. கோவில் கலையோடு தொடர்புடைய இடம். நாட்டியக் கலைகள் கோவில்களில் நடந்திருக்கின்றன. நாட்டியக் கலைஞர்கள் கோவிலில் பணிபுரிந்திருக்கின்றனர். அதுபோலவே சிற்பக்கலையும் கோவிலோடு தொடர்புடையது.

செல்வத்தினைப் பெறுவதற்காக சடங்குகள் செய்யப்பட்டன. செல்வம் இரு வழிகளில் கிடைத்தது. நிலங்களிலிருந்து மற்றும் பெண்கள் மூலம் குழந்தைகளாக. இரண்டும் உற்பத்தி மூலங்கள். இவை இரண்டுமே இறைவனின் லீலையைக் கண்ணால் காணும் ஆதாரம். அறிவதும் அறிதலின் மூலம் கடந்து செல்வதுமே ஆன்மீகத்தின் முன்நகர்வு. இந்த முன்நகர்வே மனித உண்மையின் உச்ச நிலையை அடையும் வழி. எனவே காமத்தினை அறிவின் வழியாக உணர்தான். தாந்திரீக மரபின்படி பாலியல் சிற்பங்களை உருவாக்கினர்.

இந்துமதம் பல்வேறு வழிபாட்டு முறைகளையும் ஞானச் சிந்தனைகளையும் கொண்ட மாபெரும் தொகுப்பு. இச்சிற்பங்கள்தான் நம்மனதை இறைவன்பால் செல்லவிடாமல் அலைக்கழிக்கிறதா? ஒரு வேளை கோவிலில் இச்சிற்பங்கள் இல்லையெனில் நம்மால் நேரடியாக கருவறைச் சிலையை மனச் சிதறலின்றி வணங்க முடியுமா? ஒரு சிறு ஒலி, மனதுக்குப் பிடித்த ஒன்று, அழகான பெண் அல்லது ஆண் நம் மனதை இறைவனின் மீது செலுத்தவிடாமல் செய்துவிட முடியும். மனித மனதில் எப்போதும் காமம் கொதித்துக் கொண்டே இருக்கிறது. அதை மறைத்து வைப்பதன் வழியாக நம்மால் அதை வெல்லவே முடியாது. Decode செய்ய வேண்டும். காமம் ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை.

சிலைகள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றை நம் நவீனக் கல்வி அளித்த தருக்க மனதால் புரிந்து கொள்ள முடியாது. எந்தச் சிலைக்கும் இறுதிப் பொருள் என எதுவுமில்லை. நாம் சிந்தனைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும். ஏனெனில் தாந்திரீகம் நமக்கு பழக்கமிலாத ஒன்று. எனவே ஆபாசம் என்கிறோம்.

மேலே நான் எழுதியவை பல்வேறு காலகட்டங்களில் நான் புத்தகங்களிலிருந்தும் சில அறிஞர்களிடமிருந்தும் பெற்றவை. நினைவிலிருந்து ஓரளவிற்குத் தொகுத்து எழுதியிருக்கிறேன். எனவே சில தவறுகள் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதற்கு மா.ர.கிருஷ்ணன் என்பவர் கூறியிருப்பதாவது:

நான் அடிக்கடிச் செல்லும் வைஷ்ணவ கோவில்களில் ( ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், காஞ்சிபுரம் வரதராஜப் பொருமாள் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், சென்னை பார்த்தசாரதி கோவில்) நான் இம்மாதிரி சிலைகளைப் பார்த்ததாக நினைவில்லை. தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
சிற்றின்பத்தை வெளியே வைத்து விட்டு பேரின்பதை உள்ளே வைத்தது - சிற்றின்பத்தில் நாட்டம் இருந்தால் கோவிலுக்குள் சென்று கடவுளைப் பிரார்த்திருப்பது வீண் என்ற கருத்தைச் சொல்வதாக இருக்கலாம்.
பிராமணர்கள் அனைவரும் ஆவனி அவிட்டம் அன்று பூணுல் (யஞ்னோபவீதம்) மாற்றிக் கொள்வதற்கு முன் காமோகாரிஷித் என்ற ஜபத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் அர்த்தம் காமமும் ( ஆசை) , க்ரோதமும் ( கோபம் ) தவிர்க்கபட முடியாதவை. அதனால் இவற்றை வணங்குகிறேன். இந்த ஜபம் பிரம்மச்சாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. காமத்திற்குக் காரணகர்த்தா காமன், கோபத்துக்குக் காரணகர்த்தா மன்யு. இவர்களை வணங்குவது என்னை நெருங்காதே என்று வேண்டுவதற்கே. சிவனையும் தீண்டியிருக்கிறார் காமன். "ஆறுவது சினம், கூறுவது தமிழ்" - ஔவை அழகனுக்கு நினைவூட்டியது.

காமம் அடங்காதது, அது மேலும் மேலும் இன்னும் கீழ்த்தரமாக யோசிக்க வைக்கும் என்பதை நினைவுறுத்த நினைத்தே பார்க்க முடியாத வக்கிரமான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஒரு குதிரை ( அல்லது கழுதையோ? ஏதோ ஒன்று ) உடன் உள்ள சிற்பம். அதை அந்தச் சிற்பத்தில் உள்ள பெண்ணே பார்க்கமுடியாமல் கண்களைப் பொத்திக் கொள்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற சிற்பங்கள் நடைமுறை சாத்தியமாக எக்காலத்திலும் இருந்திருக்காது.

இதே போலத்தான் அய்யனார் சிலையும். அவ்வளவு கோபம் எல்லோரையும் அழித்து விடும் - முக்கியமாக பாவம் புரிபவர்களை. எல்லோருக்கும் தெரியும் பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது என்று. அதனால் தான் வேண்டுதல்கள், பரிகாரங்கள் மற்றும் கோபம் தணிய ஊர்திருவிழா. அன்றைய நாட்களில் இருந்த கல்வி அமைப்பையும், கிராம வாழ்க்கையும் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கள் கிராமத்துக் கோவிலில் ( வெங்கடேஸ்வரர்) இது போன்ற சிலைகளைக் கண்டதில்லை. குருகுலத்தில் இப்படிப்பட்ட சிலைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் செண்பகம் பிள்ளை என்பவர் கூறியதாவது:

அவைகள் ஆபாசமானதில்லை என்று இக்காலத்தில் புரிய வைப்பது ஒரு கடினமான விஷயமாகும்.

சிலர் கோயிலுக்கு வரும் வயதுக்கு வந்தவர்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்தவர்கள் இதைப் பார்த்துதான் செக்ஸ் (sex) பற்றி தெரிந்து கொள்வதற்கு தான் என்பர். அதுவும் தவறே.

கோயில்கள் பல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் அடங்கிய தொழிலாளர்களாலும் மற்றும் அரசன், ஆச்சார்யார்களின் மேற்ப்பார்வையில் கட்டப்பட்டதாகும்.

அவைகளின் பின்னால் பல இரகசிய குறிப்புகள் உள்ளன.

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்றும்

அம்மாதிரி சிலைகள் இருக்கும் இடத்திற்கு அர்த்த மண்டபம்(அர்த்தமுள்ள விஷயங்கள் இருக்குமிடம்) மகா மண்டபம் (உயர்ந்த விஷயமுள்ள இடம்) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். எல்லாவற்றையும் இங்கே எழுதுவது கடினமே.

திருமூலர் திருமாலைப் பார்க்கும் வழியை பின்வரும் செய்யுள் மூலமாக கூறுகிறார்.

"மேலாம் எழுந்த விந்துவை நாதமுடன்

கோலால் குறி வழியே செலுத்தி

பாலாம் அமிர்து உண்ண வல்லிரேல்

மாலானது ஆளும் அவ்வித்தையே."

இதைப் படிக்கும்போது ஆபாசமாக இருக்கும். ஆனால் பொருள் தெரிந்தால் அதிசயமாக இருக்கும்.

நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார். கோயில் சிலைகளில் ஏன் ஆபாசமாக சிலைகள் இருக்கின்றன என்ற கேள்விக்கு பலர் பல விளக்கங்களை கொடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+