இந்தியாவில் இருந்து சீனா பக்கம் திரும்பும் பிரபல நிறுவனம்.. தமிழகத்தில் நடந்த மேஜர் சம்பவம் காரணம்?
சென்னை: சீனாவுக்கு வெளியே ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் தமிழ்நாட்டிலும் சில ஐபோன் தொழிற்சாலைகள் அமைந்தன. இதற்கிடையே தமிழ்நாட்டில் நடந்த ஒரு மேஜர் சம்பவத்தால் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் சீனா பக்கமே திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகில் ஆப்பிள் ஐபோனுக்கு இருக்கும் மவுசு எப்போதும் தனி.. என்ன தான் 1008 மொபைல் நிறுவனங்கள் இருந்தாலும், ஆப்பிள் ஐபோன் கிங்காக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபோனை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவோரை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆப்பிள் ஐபோன்: ஆப்பிள் நிறுவனம் என்னதான் ஒரு அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. அதன் பிறகு முழுக்க முழுக்க ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டது. உலகெங்கும் உள்ள தேவையைப் பூர்த்தி செய்யச் சீனா மிகச் சரியான இடமாக இருந்ததால் ஐபோன்கள் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன. பல ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இதே நடைமுறை தொடர்ந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் இதை நடைமுறையைப் புரட்டிப் போட்டது. கொரோனா காலத்தில் சீனாவில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டன. மற்ற நாடுகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கிய போதிலும், சீனாவில் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. இதனால் ஐபோன் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உலகெங்கும் விநியோக சங்கிலியிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்தியா: இதனால் தனது திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்பட்டது. சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கின. சீனாவுக்கு அடுத்து ஆப்பிள் பார்வை இந்தியா மீது திரும்பியது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஐபோன் தொழிற்சாலைகள் அமைந்தன.
மற்ற நிறுவனங்களைப் போல ஆப்பிள் நிறுவனம் நேரடியாகத் தனது மொபைல்களை உற்பத்தி செய்யாது. அதற்குத் தனியாக வேறு ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவார்கள். ஆப்பிள்- டாடா இடையே ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஓசூர் அருகே தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அங்கு உற்பத்தியும் தொடங்கப்பட்டது. எல்லாமே ஸ்மூத்தாகவே சென்று கொண்டு இருந்தது.
தமிழ்நாடு சம்பவம்: இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் இந்த டாடா தொழிற்சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் இல்லை என்பது நல்ல செய்தி. ஆனாலும், தொழிற்சாலையில் பல இடங்களில் இந்த தீ விபத்து மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதாம். இதுவே இப்போது சிக்கலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அடுத்த 2 மாதங்கள் பண்டிகை காலம். பொதுவாக அனைத்து விற்பனையும் இந்த இரு மாதங்களில் தான் உச்சம் பெறும். இந்த நேரத்தில் டாடா தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து பெரிய சிக்கலாக மாறியுள்ளது. விபத்து ஏற்பட்ட டாடா தொழிற்சாலையில் தான் பழைய ஐபோன் மாடல்களுக்கான பின்பக்க பேனல்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அந்த உற்பத்தி தடைப்பட்டுள்ளதால் ஐபோன் உற்பத்தி சுமார் 10 முதல் 15% வரை பாதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
சீனா பக்கம்: தற்போது வரை ஓசூர் டாடா தொழிற்சாலை மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உற்பத்தி பெரியளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் பண்டிகை கால சீசனை மிஸ் செய்தால் அது ஆப்பிள் விற்பனையைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் பேக் பேனல்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. அல்லது முழுமையாக ஐபோன்களையே அங்கிருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் இது இந்த விபத்தால் எடுக்கப்படும் ஒரு தற்காலிக முடிவாகவே இருக்குமாம். ஓசூர் டாடா தொழிற்சாலை வழக்கம் போலச் செயல்படத் தொடங்கினால், மீண்டும் இந்தியாவிலேயே உற்பத்தி சீராகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் நமது நாட்டில் மட்டுமின்றி, நெதர்லாந்து, இந்தியா நாடுகளிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications