90களின் 'சாக்லேட் பாய்' அப்பாஸ் ரீ-எண்ட்ரி: ஜி.வி. பிரகாஷ் படத்தில் இணையும் நடிகர்! சர்ப்ரைஸ் இருக்கு
சென்னை: 90களின் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வசீகரித்த "சாக்லேட் பாய்" நடிகர் அப்பாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்கவுள்ளார். ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1996 ஆம் ஆண்டு கதி இயக்கத்தில் வெளியான "காதல் தேசம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அப்பாஸ். தனது அழகான தோற்றத்தாலும், இயல்பான நடிப்பாலும் மிக விரைவிலேயே இளம் பெண்களின் கனவுக் கன்னனாக வலம் வந்தார். 'வி.ஐ.பி', 'பூச்சுடவா', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த 'படையப்பா', 'சுயம்வரம்' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாகவும், வலுவான துணை கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

காதல் தேசம் முதல் ராமானுஜன் வரை
அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பும், துறுதுறுப்பான கண்களும் 90ஸ்களின் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கடைசியாக, 2014 ஆம் ஆண்டு வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் அப்பாஸ் நடித்திருந்தார். அதன் பின்னர், பட வாய்ப்புகள் குறைந்ததால், அவர் நியூசிலாந்து சென்று அங்கேயே தனது குடும்பத்துடன் குடியேறினார். சினிமா அல்லாத வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த அப்பாஸ், திரையுலகை விட்டு முற்றிலும் விலகியிருந்தார்.
பத்து வருடங்களுக்குப் பிறகு கம்பேக்
இந்த நிலையில், சுமார் பத்து வருடங்களுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அப்பாஸ் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கவுரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
நகைச்சுவை குடும்பப் படம்
தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்தப் படம் நகைச்சுவை கலந்த ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி வருவதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 90ஸ்களின் ரசிகர்கள் தங்கள் மனதை கவர்ந்த 'சாக்லேட் பாய்' மீண்டும் திரையில் தோன்றுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்பாஸின் ரீ-எண்ட்ரி, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவரது புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications