நம்ம மோகன்லாலுக்கு வெறும் 5 மார்க் போட்ட இயக்குநர்! பதிலுக்கு லாலேட்டன் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: நடிகர் மோகன்லால் 1978 ஆம் ஆண்டு நடிப்பதற்கான ஆடிஷனுக்கு சென்றபோது ஒரு பிரபல இயக்குநர் அவருக்கு 5 மதிப்பெண் மட்டுமே வழங்கினாராம். ஆனால் பின்னாளில் அந்த இயக்குநரின் படத்திலேயே நடித்து தேசிய விருதுகளை பெற்றாராம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 5 மதிப்பெண்.... ஆம்.. அவனுடைய நடிப்புக்கு 5 மதிப்பெண் மட்டும் இட்டிருந்தார் அந்த இயக்குனர். அது ஒரு புதிய படத்துக்கான ஆடிஷன். இவனுடைய போட்டோவை பத்திரிக்கையிலிருந்த விளம்பரத்தை பார்த்து அனுப்பியிருந்தனர் அவர்கள்.

படத்தை எடுப்பது பெரிய நிறுவனம். நவோதயா ஸ்டுடியோஸ். புதுமுக இயக்குனர் எடுக்கும் அப்படத்தில் எல்லோரும் புதுமுகம். அதில் ஒரு ரோலுக்கான ஆடிஷனுக்கு தான் அவன் வந்திருந்தான். ஐந்து ஜட்ஜ்கள். அதில் ஒருவர் அவனுடைய நடிப்புக்கு போட்ட மதிப்பெண் வெறும் 5.
அவன் பெயர் மோகன்லால். வயது 20. லாலுக்கும் அவன் நண்பர்களுக்கும் சினிமாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர்கள் தாங்களே ஒரு படம் எடுத்தாலென்ன என தீர்மானித்து ஒரு படம் கூட்டு முயற்சியில் 1978ல் துவங்கினர்.
படம் 'திறனோட்டம்'. படத்தின் நாயகன் சந்திரமோகன் என்பவர். நாயகி ரேணு சந்திரா. லால் ஒரு புத்தி சுவாதீனமில்லாத வேலைக்காரன் ரோலில் நடித்த போது வயது 18 தான். நண்பன் ப்ரியதர்ஷன் அசிஸ்டன்ட் டைரக்டர். அசோக்குமார் என்கிற நண்பன் இயக்குனர். சுரேஷ்குமார் என்கிற நண்பன் (கீர்த்தி சுரேஷ் அப்பா) க்ளாப் பாய்.
மணியன் பிள்ளை ராஜுவும், ரவிக்குமாரும் (அவர்கள்) ஒரு ரோலில் நடிக்க படம் கருப்பு வெள்ளையில் தயாரானது. லால் குட்டப்பன் என்கிற ரோலில் திருவனந்தபுரத்திலுள்ள தனது வீட்டுக்கு முன்பாகவே நடித்து அரங்கேற்றம் குறித்தார். இந்தப் படம் முடிந்ததும் ஒரு தமிழ்ப்படத்தை துவக்கினார்கள் லால் அண்ட் டீம். இதற்காக பாடல் பதிவும் செய்யப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக திறனோட்டம் சென்சாரால் நேரத்துக்கு வெளியிடப்படாமல் முடங்கியது. (2005ல் ஒரு தியேட்டரில் மட்டும் ரிலீசானது. ஏஷியானெட் சேனல் ஒளிபரப்பியது). இந்நிலையில் நண்பர்கள் லாலின் போட்டோவை பேப்பரில் வந்த ஆடிஷனைப் பார்த்ததும் அனுப்பி வைத்தனர். லால் ஆடிஷனுக்கு வந்தார். நடித்தும் காட்டினார்.
நவோதயாவின் இப்படத்துக்கு ஐந்து பேர் ஆடிஷனை ஜட்ஜாக இருந்து நடத்தினார்கள். படத்தின் இயக்குனர் பாஸில், தயாரிப்பாளர்களான ஜோஸ், ஜிஜோ மற்றும் நண்பர்கள் அமன், சிபி. லால் நடித்துக் காட்ட அந்த நடிப்புக்கு பாஸில் 90 மதிப்பெண்ணும், ஜிஜோ (மை டியர் குட்டிச்சாத்தான்) 95 மதிப்பெண்ணும் இட, அமன் மற்றும் ஜோஸ் பத்துக்கும் கீழே இட, சிபி 5 மதிப்பெண் இட்டிருந்தார். ஆனாலும் லால் அந்தப் படத்தில் தேர்வானார்.
'மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்' என்கிற அப்படம் ஒரு தலை ராகம் சங்கர் நாயகனாக, பூர்ணிமா ஜெயராம் என்கிற புதுமுக நாயகி நடிக்க, லால் வில்லனாக நடித்தார். கொடைக்கானலில் ஒரு ஹோட்டலில் நடந்த ஷூட்டிங்கில் "குட் ஈவ்னிங் மிஸஸ் பிரபா நரேந்திரன்" என்கிற தன் முதல் வசனத்தைப்பேசினார் லால். பூர்ணிமாவின் கணவனாக நடித்த நரேந்திரன் என்கிற கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டது. 1980ல் ரிலீசாகி வெற்றி பெறற்றது. லால் அதன் பின் நிற்கவேயில்லை. தொடர்ந்து நாயகனாகி, பின்ஆக்ஷன் ஹீரோவாகி இன்று கம்ப்ளீட் ஆக்டராகி விட்டார். இன்று கோடிகள் வசூலை வாரிக் கொட்டுகிறது லாலின் படம்.
வெறும் 5 மதிப்பெண் மட்டுமே கொடுத்த சிபியின் அதாவது சிபி மலையில் படத்தில் பின்னாளில் நடித்த லால் தேர்ந்த நடிகனாக 'தேசிய விருதை' தன் நடிப்பில் வாங்கி பரிசாக சிபிக்கு திருப்பிக்கொடுத்தார்.
அதுவும் ஒன்றல்ல. மூன்று தேசிய விருதுகள். அதில் இரண்டு படங்களில் 5 மதிப்பெண் இட்ட சிபி மலையில் தான் இயக்குனர். படம் கிரீடம், பரதம்.... லாலேட்டனுக்கு பிறந்தநாள். வாழ்த்துக்கள் லாலேட்டா ..... இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications