மதுரை அவனியாபுரத்தில் பரபரப்பு.. அரிவாளை தூக்கி வந்த நடிகர் வேலராம மூர்த்தியின் மனைவி
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் நடிகர் வேல ராமமூர்த்தியின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளதால் அவருடைய மனைவி வீட்டிற்கு வெளியே வர முடியவில்லை என்று அரிவாளை தூக்கிக்கொண்டு வந்து அந்த தடுப்புகளை அகற்றி இருக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் நடிகரும், எழுத்தாளருமான வேலராமமூர்த்தியின் வீட்டு வாசலில் இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதால் அவருடைய மனைவி வீட்டிற்கு வெளியே வர முடியவில்லை என்று அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

தன்னுடைய வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள். அதுபோல இன்று மாலை தன்னுடைய உறவினர்கள் வர இருக்கிறார்கள் இந்த நேரத்தில் இதுபோல தடுப்புகள் வைத்து வீட்டு வாசலை அடைத்தால் உள்ளே எப்படி வர முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிறகு தன்னுடைய வீட்டில் இருந்து ஒரு அரிவாளை கொண்டு வந்து அங்கிருந்த தடுப்புகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை வெட்டி தடுப்புகளை அகற்றி இருக்கிறார்.

பிறகு காவல்துறையினர் வேல ராமமூர்த்தியின் மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதில் ஒரு பகுதியை இன்று ஒரு நாள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பிறகு உங்கள் வீட்டிற்கு செல்வதற்கு வசதியாக இடம் அமைத்து தருகிறோம் என்று பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதற்கு வேலராமமூர்த்தியின் மனைவி சம்மதம் சொல்லி இருக்கிறார்.

அவனியாபுரத்தில் தெரு பகுதியில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே வரும் வகையில் தடுப்புகள் வைத்திருந்தால் நன்றாக இருக்கும், ஒரு நாள் முழுக்க வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாத வகையில் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். அதுபோல அங்கு போடப்பட்டிருக்கும் தடுப்புகளை தாண்டி முதியவர்கள் செல்வதற்கு கடினமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications